மூட மட்டும்தான் மூடுவருமா?

signal

ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்தவர்களுக்கு மத்தியில் வெற்றுக்காலில் கோல் போடுவதுபோல் இக்கட்டுக்கு மத்தியிலும் அரசுப் பள்ளிகள் சாதித்துவருகின்றன. புதுக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை காத்திருந்து 80 மாணவ- மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். இதில் மத்திய-மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளும் அடக்கம்.

Advertisment

புதுக்கோட்டை -சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் விஜயமாணிக்கம் 20 அரசு ஊழியர்களின் குழந்தைகள் உள்பட 82 பேரை சேர்த்து சாதனை செய்திருக்கிறார். புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 வகுப்பில் 550 மாணவிகளும் பிற வகுப்புகளில் 50 மாணவிகளும் என 600 பேர் சேர்ந்திருக்கிறார்கள். நகரிலுள்ள பல தனியார் பள்ளிகள் 70,000 வரை பீஸ் கேட்பதும் அரசுப் பள்ளிகளுக்கு சாதகமாயிருக்கிறது. தவிரவும், இங்கே ஆசிரியர்கள் சிறப்பாக சொல்லித்தருவதால் தேடிவந்து சேர்கிறார்கள்.

ஆனால், 3000 மாணவிகள் இருக்கும் இந்தப் பள்ளிக்கு பத்தே கழிவறைகள்தான். இதனாலேயே கடந்த வருடம் பல மாணவிகள் மாற்றுச்சான்றிதழைப் பெற்று வெளியேறினர். ""கழிவறை வசதியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அரசு கட்டித்தந்தால் இன்னும் சாதிக்கலாம்'' என்கிறார்கள் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

இதற்கிடையில் "மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவுள்ள 830 பள்ளிகள் மூடப்படும்' என்றிருக்கிறார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இதை விமர்சித்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயலாளர் நா.சண்முகசுந்தரம், “"மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிடு' என ஒரு ஆணை. "சேர்க்கை குறைந்தால் பதில் சொல்' என ஒரு ஆணை. "எப்படி இது சாத்தியமாகும்'’என விமர்சித்திருக்கிறார்.

Advertisment

"பள்ளியை மூடும் முனைப்பிலேயே இருக்காமல், வசதிகளைச் செய்து தருவதிலும் கொஞ்சம் அக்கறை காட்டலாமே அமைச்சர்' என்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.

-இரா.பகத்சிங்

அய்யா வழிக்கு அரசு நெருக்கடி!

ayya-kovil

"லிங்காயத் சமூகத்தினரைப் போன்று அய்யா வழியினரையும் தனி மதமாக அறிவிக்கவேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைக்க முடிவு செய்தோம். இதைத் தெரிந்துகொண்டு பா.ஜ.க.வும் எடப்பாடி அரசும் அய்யா வைகுண்டர் பதியை அறநிலையத்துறை மூலம் கைப்பற்றத் துடிக்கிறார்கள்'’என பொங்குகிறார் அய்யா வழி ஆலய நிர்வாகி பாலபிரஜாபதி.

signal

""அய்யா வழிக்கென்று 200 ஆண்டுகால தனி சடங்குமுறைகள் உள்ளன. இவை எதுவும் இந்து மதத்தைச் சார்ந்து இருக்காது. தமிழில்தான் பூஜை செய்கிறோம். எங்களது வழிமுறைகளையும் பூஜைமுறைகளையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கொச்சின் கோர்ட் அங்கீகரித்த தீர்ப்பு கைவசமுள்ளது. அதிகாரத்தை வைத்து எங்களது பதியைக் கைப்பற்றத் துடிக்கிறது அரசு. அய்யாவழி பதியை அறநிலையத்துறை கையகப்படுத்த நாகர்கோவில் நீதிமன்றம் தந்த தீர்ப்பு தற்காலிகமானதுதான்''’’ என குற்றம்சாட்டுகிறார்.

அறநிலையத்துறை அதிகாரி பொன்னியோ, ""சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலின் தக்காராக அரசு என்னை நியமித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மே 24-ஆம் தேதி கோவில் வந்த என்னை, உள்ளேவிடாமல் சிலர் தடுத்து நிறுத்தினார்கள். தென்தாமரைக்குளம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்''’என்கிறார்.

அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் தலைவர் சிவப்பிரகாசம், “""அய்யாவழி என்பது இந்து மதத்தைச் சேர்ந்ததுதான். சுவாமித்தோப்பு அய்யாவழி கோவிலுக்கு வாரிசுரிமை கிடையாது. அது ஒரு குடும்பத்துக்கான சொத்து கிடையாது. ஒரு குடும்பம், கோவில் சொத்தை அனுபவிப்பதைத் தடுக்க அய்யா வைகுண்டர் கோவிலை அரசே எடுத்து நடத்த வேண்டும்''’’ என்கிறார்.

தோள்சீலை போராட்டத்துக்கு தோள்கொடுத்த அய்யா வைகுண்டர் அவர் வழி நடப்பவர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகிறார்கள்.

-மணிகண்டன்

புருடா ஐ.ஏ.எஸ்.ஸிடம் ஏமாந்த வி.ஐ.பி.கள்!

yuvarajகடந்த ஏப்ரல் மாதம் குடிமைப் பணிக்கான முடிவுகள் வெளியானபோது, திருவண்ணாமலை மாவட்டம், சின்னக்கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் ஏழையின் மகன் யுவராஜ் ஐ.ஏ.எஸ். ஆனதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவின. உடனேயே கலசப்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், அவன் படித்த கல்லூரித் தாளாளர், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் என அரசியல் பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் குவியத் தொடங்கின.

நாம் யுவராஜை சந்தித்து, "751-ஆவது ரேங்க் வாங்கியிருப்பதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு ஐ.ஏ.எஸ். கிடைக்குமா?'’என கேட்டபோது, "ஐ.ஆர்.எஸ். கிடைக்கும்னு சொல்றாங்க'’என்றார். அதன்பிறகுதான் இந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுப் பட்டியலில் யுவராஜ் என்ற பெயரே இல்லையென நமக்குத் தகவல் வந்தது.

யுவராஜை தொடர்புகொண்டபோது, லைனில் வந்த அவர், “"புரபஷனல் சர்டிபிகேட் தரல... அதனால நிறுத்தி வெச்சிருக்காங்க'’என்றார்.

புரபஷனல் சான்றிதழ் தராத 59 பேர் பட்டியலிலும் யுவராஜ் பெயர் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, "நண்பர்கள் ஆர்வக்கோளாறில் தகவல் பரப்பியிருக்காங்க. சின்ன வயசுல ஏதோ வேகத்துல செஞ்சிருப்பான். பெருசு பண்ணவேண்டாம்னு விட்டுட்டோம்'’என்றார். மீண்டும் யுவராஜை தொடர்புகொண்டபோது, "சான்றிதழ்களை மாற்றிக் கொடுத்துவிட்டேன். அதனால் என் பெயரை நிறுத்தி வெச்சிருக்காங்க. திரும்பவும் ஜூன் 3-ல ஐ.ஏ.எஸ். எழுதறேன்'’என சமாளித்தார்.

அதற்குள் இந்த வாட்ஸ்அப் ஐ.ஏ.எஸ். யுவராஜ், நெய்வேலி என்.எல்.சி. பொறியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் "நீங்களும் வெற்றி பெறலாம்' என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரையே நிகழ்த்திவிட்டு வந்துவிட்டாராம்.

-து.ராஜா