சுற்றுலா சென்ற சிறுமியிடம் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள முக்கொம்பு திருச்சியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் முக்கொம்பிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் குறிப்பாகத் தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதுமட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் இந்தச் சுற்றுலாத் தலத்திற்கு வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் முக்கொம்பிற்கு வந்துள்ளார். அப்போது ஜீயபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவியாளர் சசிகுமார் மற்றும் அவருடன் பணியாற்றும் சக காவலர்கள் மூன்று பேர் அங்கு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அதனைக் கண்ட அந்தப் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த ஆண் நண்பர் மற்றும் பெண் இருவரையும் சோதனை என்ற பெயரில் காருக்குள் அழைத்துச் சென்று காவலர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவசர உதவி எண்ணிற்குப் புகார் அளித்ததைத் தொடர்ந்து எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் அந்த காவலர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.