வடமாநிலத்தைச் சேர்ந்தவர் பூஜா. 19 வயதான இவர் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்துகொண்டு பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்று வருகிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் லோகேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 22 வயதான லோகேஷ் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் 8 மாதங்களாகக் காதலித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷிடம் கூறியுள்ளார் பூஜா. நேற்று பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறியுள்ளார் பூஜா. தொடர்ச்சியாக அவர் அப்படிக் கூறியதால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீப்பற்றி எரிந்த நிலையில் வலி தாங்காமல் காப்பாற்றுங்கள் எனக் கத்தியபடி சாலையில் ஓடியதாகக் கூறப்படுகிறது. அவ்வழியாகச் சென்றவர்கள் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பல்லடம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பெண்ணிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பூஜா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.