Skip to main content

"எனக்கு அவர் ஓனர்தான், அதுக்காக என் மனைவியை..." - கொலை செய்த டிரைவர் வாக்குமூலம்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Kill the owner



ஜாமீனில் வெளியே வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரிடம் வேலை செய்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடலூர் மாவட்டம், புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (வயது 31). இவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் வெள்ளைக்காரன் மகன் சக்திவேல் (24) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சில நேரம் முருகனே டிராக்டர் எடுத்து ஓட்டுவார். அப்படி ஒருமுறை தனது டிராக்டரில் முருகன் மணல் கடத்தியுள்ளார். 
 

அப்போது தியாகதுருகம் போலீசார், அந்த டிராக்டரை மடக்கி முருகனை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைத்தனர். கடந்த ஜூன் மாதம் 20ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த முருகன், 22ந் தேதி பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். 
 

இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முருகனின் மனைவி வளர்செல்வியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சக்திவேல் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து சக்திவேலை போலீசார் தேடி வந்தனர்.
 

சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் தேடுவது பற்றி அறிந்த சக்திவேல், பெரியமாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் சரண் அடைந்தார். அவர், சக்திவேலை தியாகதுருகம் போலீசில் ஒப்படைத்தார். சரண் அடைந்த சக்திவேலிடம் போலீசார் விசாணையில் ஈடுபட்டனர். 
 

போலீசில் சக்திவேல், நான் டிரைவராக இருந்தேன். முருகன் டிராக்டர் வாங்கியதில் இருந்து, அந்த டிராக்டருக்கு நான்தான் டிரைவராக இருந்தேன். அவர் டிராக்டர் எடுத்துக்கொண்டு எங்கெங்கு போக வேண்டும் என்று சொல்கிறாரோ அதன்படி செய்தேன். நாளடைவில் என்னிடம் நன்றாக பழகினார். திடீரென வீட்டுக்கு வந்து வேலை பற்றி சொல்லுவார்.
 

சில நேரங்களில் நான் வீட்டில் இல்லாதபோதும் வந்திருக்கிறார். இதைப்பற்றி அக்கம் பக்கத்தினர் எனக்கு சொன்னார்கள். நான் இதுபற்றி கேட்கும்போது, உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்பார். நான் அவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவர் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்டார். 
 

நான் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு வரும்போது எனது மனைவியை ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி அவரது கையில் போட்டுக்கொண்டார். எனது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த நான் எனது மனைவியையும், முருகனையும் கண்டித்தேன். இருப்பினும் அவர்கள் கூடா நட்பை விடவில்லை.
 

இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. இதனை என்னால் அடக்கி கொள்ள முடியவில்லை. எனக்கு அவர் ஓனர்தான். அதற்காக என் மனைவியை எப்படி நெருங்கலாம். நான் எச்சரிச்சதையும் அவர் பொருட்படுத்தவில்லை. இதனால் முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான், அவரை பார்க்கும்போது நடந்தையெல்லாம் மறந்தவிட்ட மாதிரி காட்டிக்கொள்வேன். அவரும் என்னை நம்பினார். அவரிடம் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். 
 

அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ந் தேதி இரவு பிரிதிவிமங்கலம் மணிமுக்தாற்று பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி அதன் மூலம் மீன்பிடிக்க முருகனை அழைத்தேன். முருகனும் வந்தார். பின்னர் நான் மின்கம்பியை வளைத்து, அதில் குச்சியை கட்டி ஆற்றின் ஒரு பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் வைத்தேன். மின்கம்பியின் மறுமுனையை, ஆற்றின் கரையில் இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்ஒயருடன் இணைத்தேன். இதில் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததில் மீன்கள் செத்து மிதந்தன.
 

இதையடுத்து மின்கம்பியை எடுத்து விட்டு, மீன்களை எடுத்து வருமாறு முருகனிடம் கூறினேன். அப்போது அவர் ஆற்றில் இறங்கியதும், மீண்டும் மின்கம்பியை மின்ஒயருடன் இணைத்து தண்ணீரில் போட்டேன். இதில் மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்தார். பின்னர் நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். பின்னர் போலீசார் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடம் என்னை பற்றி விசாரிப்பது தெரிய வந்தது. இதனால் வேறு வழியில்லாமல் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
 

விசாரணை முடிந்ததும் சக்திவேல் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
chennai alwarpet incident Owner Bail Out

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இது குறித்து சென்னை அபிராமபுரம் காவல்துறையினர், ‘அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணத்தை விளைவித்தல்’ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த விபத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் நடைபெறவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (C.M.R.L.) சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் சதீஷ் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் நேற்று (30.03.2024) இரவு அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சரணடைந்தார். இதனையடுத்து சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக்குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “தொடர்ந்து விடுதிகளை பராமரித்து வந்தோம். இருப்பினும் மெட்ரோ ரயில் பணிகளின் போது கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதே போன்ற அதிர்வுகள் அருகில் கட்டங்களிலும் ஏற்பட்டன. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இரு முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.