ADVERTISEMENT

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்க வரி கட்டண உயர்வு!

08:43 PM Apr 26, 2020 | rajavel

ADVERTISEMENT


உலக மக்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு நீட்டிப்பால் ஏறக்குறைய 1 மாதக் காலம் இந்தியாவில் தொழில்கள், தொழிற்சாலைகள் நசிவுற்று சிறு குறு வணிகர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்திய பொருளாதாரம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஊரடங்கு தடை முற்றிலும் நீக்கப்பட்டாலும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பி.விஜயலட்சுமி


வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிக மாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கும் மாதத் தவணையை 3 மாதங்கள் ஒத்தி வைக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.


கடன் பெற்றவர்கள், 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. கட்டத் தவறினால், கூடுதல் வட்டியுடன் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் ஒரே அணுகுமுறையை கடைப்பிடித்தன. இதனால் பொதுமக்களுக்கு சிறிதளவும் நன்மை கிடையாது என்பது தெரிய வந்தது. இத்திட்டத்தால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.

ஊரடங்கு நீட்டிப்பால் மறு ஆய்வு செய்த மத்திய அரசு 17.4.2020 அன்று பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்படைந்தவர்களுக்கு வங்கிகளில் கடன் பெற சில வழிவகைகளை அறிவித்தது. இதனால் மக்களுக்கு கடன் பெறும் எண்ணம் உருவாகும். மேலும் கடன் சுமை அதிகரிக்கும்.

வாழ்வாதாரத்தை சமன் செய்ய மக்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் “காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே” என்று கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வாகன போக்குவரத்து இயங்காமல் போனதால் தேசிய சுங்க சாவடிகளில் வரி வசூலிக்கப் படவில்லை.

ஒருபுறம் மக்கள் மீது அதிக அக்கறையோடு செயல்படுவதாகவும், மறுபுறம் பொதுமக்களை அச்சுறுத்துவது போலவும் மத்திய அரசு வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தும் விதமாக, ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்க வரி வசூல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, தற்போது 26 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ளா சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் மாதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், மேலும் ஆண்டுத்தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் மொத்த விலை குறியீட்டு எண் அதிகரிப்பு அடிப்படையில் சுங்கக் கட்டணம் மற்றும் வசூல் குறித்த விதி 2008ன் படி கட்டணம் நிர்ணயிக்கப்படும்” என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.



கீழ்க்கண்டவாறு சுங்கக் வரி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

மினி பஸ் : ஒருமுறை செல்ல கடந்த ஆண்டு கட்டணம் ரூ.110. புதிய கட்டணம் ரூ.115.
24 மணி நேர கட்டணம் ரூ.165, தற்போது ரூ.175.
மாத கட்டணம் ரூ.3,720. புதிய கட்டணம் ரூ.3,860ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் கடந்த ஆண்டு ரூ.235. தற்போது ரூ.245.
24 மணி நேர கட்டணம் ரூ.350. புதிய கட்டணம் ரூ.365.
மாத கட்டணம் ரூ.7,795. தற்போது ரூ.8,085 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
மல்டி ஆக்ஸில் வாகனங்களுக்கு ரூ.365. புதிய கட்டணம் ரூ.380.
24 மணி நேர கட்டணம் ரூ.550. தற்போது ரூ.570.
மாத கட்டணம் ரூ.12,220. புதிய கட்டணம் ரூ.12,675ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
7 ஆக்ஸில் வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல ரூ445. புதிய கட்டணம் ரூ.465.
24 மணி நேர கட்டணம் ரூ.670. தற்போதைய கட்டணம் ரூ.695.
மாத கட்டணம் ரூ.14,880. புதிய கட்டணம் ரூ.15,430.

முழுமையாக இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி இருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு நிச்சயம் வழிவகுக்கும். ஊரடங்கு காலம் முடிவுற்று நிலைமை சீராகும்வரை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு மக்களை துன்புறுத்துவது கண்டனத்துக்குரியது என்று தலைவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


பி.விஜயலட்சுமி
சமூக ஆர்வலர்
pvssaravan@gmail.com


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT