dmk leader incident police arrested two persons at trichy tollgate

Advertisment

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதாகும் இவர் நேற்று முன்தினம் (01/02/2022) இரவு 09.00 மணியளவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மடிப்பாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய இரண்டு பேரை திருச்சி, சமயபுரம் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அவர்களை நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.