திருச்சி, மணப்பாறை அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
மணப்பாறை, கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஏப்ரல் மாதம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி எங்கள் வீட்டில் யாரும் இல்லாதபோது தன்னுடன் தனிமையில் இருந்த ராம்கி என்பவர், தன்னை ஏமாற்றி விட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஷ்யா சுரேஷிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் மனுவை வாங்க மறுத்துவிட்டார். ஆனாலும் தொடர்ந்து தினமும் நடவடிக்கை எடுக்க சொல்லி மகளிர் காவல்நிலையத்திற்கு அலைந்து கொண்டே இருந்தார். இந்த நிலையில் 1 மாதம் கழித்து மணப்பாறை டி.எஸ்.பி. குத்தாலிங்கத்திடம் போய் புகார் செய்திருக்கிறார்.
அப்போது அந்த டி.எஸ்.பியிடம் அதே ஊரை சேர்ந்த இன்னொரு பெண், அந்த ஊரை சேர்ந்த வாலிபர் ஏமாற்றிவிட்டதாக புகார் சொல்ல உடனே டி.எஸ்.பி. குத்தாலிங்கம் வழக்கு பதிய சொல்லி மகளிர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு போட, மகளிர் இன்ஸ்பெக்டர் உடனே க்ரைம் நம்பர் கொடுத்து வழக்கு பதிவு செய்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் ஊர்காரர்கள் அந்த பையனை அழைத்து, அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க உடனே அந்த பெண் வழக்கை வாபஸ் வாங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் ரஷ்யா சுரேஷ் என்ன செய்வது என்று யோசித்து கடைசியில் வேறு வழியில்லாமல், அந்த க்ரைம் நம்பரில் இந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். ராம்கி மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தாலும், இன்ஸ்பெக்டர் ரஷ்யா சுரேஷ் ராம்கியை கைது செய்யாமல் ஏட்டு கஸ்தூரி மூலம் சிறுமியின் கருவை கலைக்க சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கிறார்.
போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டால் உயர்நீதிமன்றத்திலே முன்ஜாமீன் கிடைப்பது சிரமம். ஆனால் ராம்கி திருச்சி நீதிமன்றத்திலே ஜாமீன் பெற்றிருக்கிறார். இந்த நேரத்தில்தான் 17 வயது சிறுமி இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட, அவன் ஜாமீன் வாங்கிவிட்டான், இனி அவனை எதுவும் செய்ய முடியாது, உன் கருவை நீ கலைத்திருக்க வேண்டியதுதானே என்று சொல்லி திட்டியிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டரின் இந்த பேச்சில் வெறுத்து போன 17வயது சிறுமி தான் விஷம் குடித்து இறந்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜாமீன் கிடைத்து மணப்பாறை கோர்டில் ஆஜர் ஆனா ராம்கியை, மணப்பாறை போலீஸ் கைது செய்திருக்கிறது. 17 வயது சிறுமியின் தாய் லெட்சுமி என் மகள் இறப்புக்கு காரணம் ராம்கி என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் மீண்டும் தற்கொலை தூண்டுதல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
5 மாத கர்ப்பிணியான சிறுமி கொடுத்த புகாரில் ராம்கியை கைது செய்து, டி.என்.ஏ. பரிசோதனை செய்திருக்க வேண்டும். சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து திருச்சியில் உள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இதுகுறித்து விசாரித்து சிறுமிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும், இப்படி எதுவுமே நடக்காமல் போனதால் அப்பாவி சிறுமி இனி நியாயம் கிடைக்காது என்று தற்கொலைக்கு முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதற்கிடையில் திருச்சி மணப்பாறை 17 வயது சிறுமி தற்கொலை விவகாரம், வழக்கு பதிவு செய்தவுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருந்தால் சிறுமியின் தற்கொலையை தடுத்திருக்க முடியும். ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன் என் தொடர்ந்து 7 முறையாக, அதிலும் குறிப்பிட்ட ஒரு மண்டலத்தில் 6 வது முறையாக தாமாக முன் வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை துவங்கி, தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றது.