ADVERTISEMENT

சைடிஷ்க்கான போராட்டம்; திக்குமுக்காடிய திருடர்கள்  

12:36 PM Feb 18, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை வைத்து மது அருந்திய சம்பவம் பொதுமக்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள ஆய்மழை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சந்திரகலா. இந்த தம்பதி கடந்த 10ம் தேதியன்று தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அன்றிரவு உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

அப்போது, அவர்களது வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைரத் தோடுகள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சந்திரகலாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உடனே அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரகலா, பதறியடித்துக்கொண்டு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கையில் மதுபாட்டிலோடு வந்த கொள்ளையர்கள், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைட்டிஷ்ஷாக வைத்துக்கொண்டு, டம்ளர் மற்றும் சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சாவகாசமாக மது அருந்திவிட்டு அங்கிருந்த நகைகளைக் கூலாகத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், போலீஸ் தங்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக கைரேகை பதியாத அளவிற்குத் தண்ணீரால் துடைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சந்திரகலா புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT