ADVERTISEMENT

முட்டாள்தனமா பேசாதீங்க வாயை பொத்துங்க... ஜெயக்குமாருக்கு தங்கதமிழ்செல்வன் பதிலடி

11:48 PM Dec 10, 2018 | rajavel

அமமுகவுடன் அதிமுக இணைந்தால் திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தினகரன், சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளவோம் என்றார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக தங்க தமிழ் செல்வனை தொடர்பு கொண்டோம்.

தினகரன் சசிகலா தவிர யார் வந்தாலும் இணைத்துக் கொள்ளவோம் என ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

அமைச்சர் வாய் அடக்கத்தோடு பேச வேண்டும். அதிமுக தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்காது என எனக்கு தெரியும். தினமும் 500 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மக்களை பார்க்கிறேன். எல்லா தரப்பு மக்களையும் சந்திக்கிறேன். இது அதிமுகவுக்கும் தெரியும், ஜெயக்குமாருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே இப்படி பேசினால் எடுபடாது. தோல்வியை தான் சந்திப்பார்கள்.

அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைவதற்கு தடையாக இருப்பவர்கள் யார்?

ஒரு ரெண்டு மூணு சுய நலவாதிகள் தான் தடையாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் பதவிதான்.

இந்த இரு கட்சியும் இணைந்தால் யாருக்கு லாபம்?

இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால் லாபம் இல்லை. சட்டமன்றத்தில் அம்மா பேசும்போது, ''நான் இருக்கும் வரையும் சரி, எனது மறைவிற்கு பிறகும் சரி அதிமுக 100 வருடம் ஆட்சி செய்யும்'' என்று சொன்னார்களே அதை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம்.

நீங்கள் இப்படி சொல்லியும் தினகரன், சசிகலாவை சேர்த்துக் கொள்ளக் மாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அந்த முடிவில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அவர்கள் தெளிவாக இருக்கிறார்களோ இல்லையோ அது எனக்கு தெரியாது. அதிமுக இன்று வலுவிழந்து நிற்கிறது. டிடிவி தினகரன் உறுதியாக இருக்கிறார். பொதுமக்கள் சப்போர்ட் இருக்கிறது தினகரனுக்கு. அதை புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள். உளவுத்துறை கூட அதிமுக வெற்றி பெறாது என்றுதான் சொல்கிறது. அதை புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதிமுக பலவீனமாக இருப்பதாக பாஜக புரிந்து கொண்டதாக எப்படி சொல்கிறீர்கள்?

செய்திகள் வெளியாகிறது. தகவல்கள் வருகின்றன.

ஒருவேளை அதிமுக உங்களுடன் இணையவில்லையென்றால் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி வைக்குமா?

பாஜகவுடன் போக மாட்டோம். அதிமுக வெற்றி பெற வேண்டும். அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணையவேண்டும். எங்களது பிரதான எதிரி திமுக தான்.

அதிமுக ஒரு பெரிய கடல் என ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பெரிய கடல் ஏன் ஆர்.கே.நகரில் தோற்றது?. உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் பயப்படுகிறது?. இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுகிறது?. அமைச்சர் முட்டாள்தனமாக பேசக்கூடாது. வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அம்மா சட்டசபையில் சொன்னதை நீங்கள் இரவில் தூங்கும் பொழுது கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அம்மாவிற்கு மரியாதை கொடுப்பதாக இருந்தால் உங்களுடைய லெவல் என்ன? நின்றால் டெபாசிட் வாங்குவீர்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பேசணும். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் பேசக் கூடாது. நான் தினமும் 500 கிலோ மீட்டர் சுற்றுகிறேன், மக்களை பார்க்கிறேன், மக்களை சந்திக்கிறேன் அதிமுக இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT