ADVERTISEMENT

தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் ஆபத்து நீதிபதி வேதனை!

11:32 PM Nov 25, 2019 | santhoshb@nakk…

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணை, பாபநாசம் தாமிரபரணி படித்துறை பகுதிகளை பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “தாமிரபரணி நதியில் குளிக்க வருகை தரும் மக்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வற்ற நடவடிக்கைகளால் நதி மாசுபட்டு வருகிறது. குறிப்பாக சோப்பு போட்டு குளித்தல், துணி துவைத்தல், பரிகாரம் முடித்த பிறகு துணிகளை ஆற்றிலேயே விட்டுச் செல்லுதல் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு இல்லாததாலும், எண்ணிலடங்கா மாசுகளாலும் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுகிறது.

ADVERTISEMENT


மேலும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி துவங்கும் இடத்திலேயே காணப்படும் இது போன்ற மாசுக்களால் கொடிய பாக்டீரியக்கள் உருவாகியுள்ளன. இதனால் மாசுபட்ட இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு, இந்த பாக்டீரியாக்களால் தான் தண்ணீர் விஷமாக மாற வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே வி.கே.புரம் நகராட்சியின் சுகாதார ஊழியர்கள், தாமிரபரணி நதியிலிருந்து வாரத்திற்கு 10 டன் துணிகளை, உயிரை பணயம் வைத்து அகற்றி வருவது பாராட்டத்தக்கது. எனவே, கழிவு துணிகளை தாமிரபரணி நதியில் இனி யாரும் விடக்கூடாது. மீறி விடுபவர்களுக்கு பாவம் வந்து சேரும். எனவே, இது குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போல், குப்பை, கழிவுகளையும் நீர் நிலைகளில் விடக்கூடாது.”என்றார். முன்னதாக வி.கே.புரம் நகராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், விஞ்ஞானி செல்லப்பா, சப் கலெக்டர் பிரதீப் தயாளன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், தாமிரபரணி கோட்ட உதவி செயற்பொறியாளர் தங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT