ADVERTISEMENT
கடந்த மார்ச் 18- ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநிலமான செகந்திராபாத்திலிருந்து தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்த ஆண்கள், பெண்கள் உட்பட 33 பேர்கள் நெல்லை மாவட்டத்தின் முக்கிய ஆலய நகரமான நாங்குநேரியின் வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்தனர். சில முக்கிய பூஜை நிகழ்ச்சியின் பொருட்டு அவர்கள் இங்கு தங்கிய நிலையில், திடீரென்று மார்ச் 24 ஆம் தேதி அன்று கரோனா தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பின் அது தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
ADVERTISEMENT
இதனால் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். நாங்குநேரி வானமாமலை ஆலயத்திற்குச் சொந்தமான மடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொற்று காணப்படவில்லை. 51 நாட்களாக மடத்தில் தங்கிய அவர்களுக்கு ஆலயம் சார்பிலும், சமூக ஆர்வலர்களும் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தடையின்றி வழங்கப்பட்டது.
இதனிடையே இவர்கள் தங்களின் சொந்த மாநிலம் செல்வதற்காக இருமுறை இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் மறுக்கப்பட்டதால். தமிழக அரசு மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் போன்றவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் ஊர் செல்ல இ-பாஸ் மற்றும் பஸ் வசதி கோரியதையடுத்து அதற்கான அனுமதிகள் கிடைத்தன. அவர்கள் செகந்தராபாத் செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான இ-பாஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து மடத்தில் தங்கியிருந்த செகந்திராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம் முரளிதர், ஜோதி. ஸ்ரீமன் நாராயணா, ராதாகிருஷ்ணா, விஜயலட்சுமி உள்ளிட்ட 30 பேர்களும் அரசு பஸ் மூலம் செகந்திராபாத் புறப்பட்டுச் சென்றனர். கடந்த 50 நாட்களாக அவர்களிடம் பாசம், நேசத்துடன் பழகிய அக்கம் பக்கத்தினர் மற்றும் மடத்தின் ஊழியர்கள் கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர்.
அவர்கள் ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா, டி.ஆர்.ஓ. முத்துராமலிங்கம், பயிற்சி உதவி கலெக்டர் சிவகுரு உள்ளிட்ட அனைவருக்கும் வானமாமலை மடத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT