Skip to main content

குடிபோதையில் மூன்று கொலை... வேலையைக் காட்டத்துவங்கிய டாஸ்மாக்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

nellai district tasmac opening incident


கரோனா தொற்றும் பரவும் சூழலில் டாஸ்மாக் வேண்டவே வேண்டாம் என அனைத்துக் கட்சிகளும் போராடிய வேளையில், ஆளும் அதிமுக அரசு மட்டும் டாஸ்மாக்கை அனுமதித்தது. இதனால், நெல்லை மாவட்டத்தில் தாய் மற்றும் இரண்டு கூலித் தொழிலாளர்கள் குடிபோதையால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய, மாநில அரசுகள். நாடு முழுவதும் மே 17- ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் போது, சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதில் நோய்க்கட்டுப்பாடுப் பகுதியினைத் தவிர மற்றைய இடங்களில் மதுபானக்கடைகளைத் திறக்க அனுமதிக்கும் வகையிலான தளர்வும் இருந்தமையால், தமிழ்நாட்டில் மட்டும் மதுபானக் கடைகளான டாஸ்மாக் வேண்டவே வேண்டாம் எனத் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராடிப் பார்த்த நிலையில், மே 7- ஆம் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமென அறிவித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசு. எதிர்பார்த்தது போலவே கரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் ஒருபுறம் இருக்க, குடிபோதையால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் கூடங்குளம், ராஜவல்லிபுரம் மற்றும் பிரம்மதேசம் ஆகிய இடங்களில் மூன்று கொலைகளும், மானுார், முக்கூடல், சேர்ந்தமரம் மற்றும் கண்டியப் பேரி உள்ளிட்ட பல இடங்களில் அரிவாள் வெட்டு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

நோய்க்கட்டுப்பாடு உள்ள மேலப்பாளையம் பகுதியிலுள்ள இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தவிர, நெல்லை மாவட்டத்தில் மட்டும் 95 கடைகள் இயங்கின. 43 நாட்களுக்குப் பின் திறக்கப்பட்ட மதுக் கடையால் குஷியான குடிமகன்கள் தங்களது தாகம் தீரும் வரை குடித்துத் தங்களின் வேலைகளைக் காட்டத் துவங்கினர். நெல்லை புறநகர் மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்டது ராஜவல்லிபுரம். இங்கு டீக்கடை நடத்தி வரும் துரைராஜ் ஊரடங்கின் போது டீக்கடை திறந்தார் எனக் காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

 

 


இதற்கான தகவலைக் கொடுத்தது அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து தான் என நினைத்து வந்த துரைராஜின் மகன் சுரேஷ், தனது நண்பன் இசக்கிராஜாவோடு சேர்ந்து மதுபோதையில் இசக்கிமுத்துவின் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்தினை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். 

இதில் முதல் கொலையாகப் பதிவான அதேவேளையில், இரண்டாவது கொலையாக, அம்பாசமுத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிரம்மதேசம் வடக்குத்தெருவைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முப்பிலி பாண்டிக்கும் கோயில் வரி வசூல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று (07/05/2020) டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் நிறைவாகக் குடித்த முப்புலிபாண்டி தனது தம்பி மருதுபாண்டி துணையுடன் ராஜேந்திரனிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து ராஜேந்திரனை வெட்டிக் கொன்றனர். காவல்துறையும் விசாரணை செய்து வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தது.

 


மூன்றாவது கொலையோ, சொத்துக் கேட்டு பெற்றத் தாயை வெட்டிக் கொன்றதாக வழக்குப் பதிவானது. கூடங்குளம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. 60 வயது பெண்மணியான இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் கடைசி மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கின்றார். நேற்று தனியாக இருந்த ஜெயமணியிடம் அவர் வசிக்கும் வீட்டினை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு மகன் ராஜன் அளவுக்கதிமான குடிபோதையில் கேட்டு தொந்தரவு செய்ததாகத் தெரிகின்றது. மறுத்தத் தாய் ஜெயமணியை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளதாகத் தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா விசாரணை செய்து வழக்குப் பதிந்து கொலையாளியான மகன் ராஜனைக் கைது செய்தார். ஒரே மாவட்டத்தில் இரண்டு அன்றாடங்காய்ச்சிகளும், பெற்ற தாயும் பலியானது டாஸ்மாக் போதையால் என்பது வெட்டவெளிச்சமாகியது. இதனால், எதிர்க்கட்சிகள் மீண்டும் டாஸ்மக்கிற்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.