ADVERTISEMENT

குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்? அது சாத்தியமா? தமிமுன் அன்சாரி

05:59 PM May 05, 2020 | rajavel



தமிழகத்தில் மே 7ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. இதுபற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் அலைவதை பார்க்கும்போது இத்தனை நாள் பின்பற்றிய ஊரடங்கின் பயன் வீணாகி கரோனா நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற சமூக கவலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

எந்தெந்த கடைகளை திறப்பது என்பதிலும், நேர வரையரையிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மே 7 முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் வேதனையளிக்கிறது.


மதுப்பழக்கம் உள்ளவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மனமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு, சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்? அது சாத்தியமா? இவையாவும் நிலைமையை மோசமடைய செய்து, முழு தமிழகத்தை சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும்.

எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT