ADVERTISEMENT

கரோனாவைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு! -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

03:41 PM Mar 16, 2020 | rajavel

கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில், தங்கள் கைகளை மக்கள் கழுவுவதற்குத் தேவையான தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


ADVERTISEMENT


சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. அதனால், கரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை. கைகளைச் சுத்தப்படுத்தத் தேவையான ஹேண்ட் வாஷ் போன்ற திரவங்கள் வழங்கப்படவில்லை.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிக்கச் செய்வதுடன், கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் திரவங்களையும் வழங்கவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோல, சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், அந்தக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கரோனா வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கூறி, சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார்.

அதில், கரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT