ADVERTISEMENT

கேரளாவை அலறவிட்ட கொள்ளையர்கள்; தமிழக காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

12:08 PM Nov 26, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டறை சுரேஷ் (30). தூத்துக்குடியின் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ் (34). இருவரும் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பைக் ஒன்றை திருடியுள்ளனராம். பின்னர், பாரிப்பள்ளியிலுள்ள வீட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள கனகமந்திரிலிருக்கும் ஷியாம்ராஜ் என்பவரின் வீட்டை உடைத்து அலமாரியிலிருந்த ரூ. 3.75 லட்சம் மற்றும் மூன்றரை பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம்.

ஷ்யாம்ராஜ் தன் மனைவி பணிபுரியும் இடத்திலிருந்து வீடு திரும்பும் போது வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமாகக் காணப்பட்ட இருவரை புகைப்படமெடுத்துள்ளளார். மேலும், அவர் வீடு வந்து பார்த்ததில் வீட்டின் முன் ஒருவர் பைக்கில் செல்வதையும், மற்றொருவர் வீடு முன்னே உள்ள பார்க்கிங்கில் நடந்து செல்வதைப் பார்த்தவர், யார் என்று அவர்களைக் கேட்க, அவர்களோ தண்ணீர் குடிக்க வந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும், அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடப்பதால் அத்தொழிலாளர்கள் என நினைத்து சந்தேகப்படவில்லையாம். ஆனால், அதன் பிறகே தனது வீடு கோடாரியால் உடைக்கப்பட்டு கட்டுமான நிறுவனப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு பதறியவர் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து, அப்பகுதியில் கவிதா என்பவரின் வீடும் உடைக்கப்பட்டு அலமாரியிலிருந்த ஏழரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. தவிர அங்குள்ள இரண்டு நாய்கள் மயங்கிக் கிடந்ததால் அவைகளுக்கு உணவில் மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகித்தனர்.

இதைத்தொடர்ந்து, சிக்காமல் போன கொள்ளையர்கள் தமிழகம் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சி.சி.டி.வி. ஆதாரம் மற்றும் புகைப்படங்களை தமிழகப் போலீசாருக்கு கேரள போலீசார் அனுப்பி உஷார் படுத்தியிருக்கிறார்கள். இதனிடையே, தென்காசி மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை எல்லையில் எஸ்.ஐ. வெள்ளத்துரை மற்றும் மாரிராஜ், பொன்ராஜ் உள்ளிட்ட போலீசார் பைக் மற்றும் பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் பொருட்டு கொல்லம் – தென்காசி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் வந்த அந்தப் பேருந்தைச் சோதனையிட்டனர். அது சமயம் பயணிகளோடு பயணிகளாக இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 350 ரூபாய், 36 கிராம் தங்க நகை, 178 கிராம் கவரிங் நகை மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கத்தி, கடப்பாரை, கம்பி போன்றவைகளைப் பறிமுதல் செய்து அவர்களையும் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT