திருச்சி இருங்களூரைச் சேர்ந்தவர் சங்கர் (43). இவருக்கு ஜெகதீஸ்வரி (37) என்ற மனைவியும், விஷால் (12), ரித்யான் (9) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சங்கர் மனைவி ஜெகதீஸ்வரி, மகன்களுடன் பெரம்பலூரில் வசித்துவருகிறார். இந்திய ராணுவத்தில் மேற்கு வங்காளத்தில் உள்ள கேம்ப்பில் ஜே.சி.ஓ. அதிகாரியாக சங்கர் பணிபுரிந்தார்.
2 மாத விடுமுறைக்குப் பிறகு பணிக்குத் திரும்பியுள்ளார் சங்கர். இந்நிலையில், நேற்று (12.07.2021) மேற்கு வங்காள மாநிலத்தில் பணியில் இருந்த சங்கருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால், சக ராணுவ அதிகாரிகள் சங்கரை ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்நிலையில் அவரது உடல் மேற்கு வங்காளத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அவரது கிராமத்திற்கு கொண்டுவரப்படுகிறது.