கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.சாத்தனூர் ஊராட்சி எடைக்கல் காலனியில் ரேஷன் கடை கேட்டு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மேலும், அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில், 1.7.2022 அன்று எடைக்கல் காலணியில் உள்ள சமுதாயக்கூட கட்டிடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், தீர்மானித்தபடி நேற்று (1ம் தேதி) பொருட்கள் வழங்காததால், நேற்று காலை 11 மணியளவில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை 120க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து தாசில்தார், வட்ட வழங்க அலுவலர், உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் மாவட்ட துணைப் பதிவாளர் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.