சென்னை சுற்றுச்சூழல் தலைமை அலுவலகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன், கட்டுமான பணிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் தடையில்லாச் சான்று வழங்குவதில் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அவருடைய அலுவலகத்திலும், சென்னையில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கோடிக்கணக்கான பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்குச் சொந்தமான வீடு புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ளது. அந்த வீட்டில் இன்று (11/01/2021) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான குழு தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சோதனையில் இன்னும் கணக்கில் வராத பல ஆவணங்களும் நகைகளும் பணமும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.