ADVERTISEMENT

கள்ளு கடைகளை குறிவைக்கும் காவல்துறை... 

03:37 PM Mar 17, 2020 | rajavel

ADVERTISEMENT


கோடைக்காலம் துவங்கிவிட்டதால், கோடையின் வெப்பத்தில் இருந்து தங்களது உடலை காத்துக்கொள்ள பொதுமக்கள் இளநீர் குடிப்பது, கூழ் குடிப்பது, நீர் மோர் குடிப்பது, மதிய நேரங்களில் கஞ்சி குடிப்பது, பழச்சாறுகள் அருந்துவது என தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் குடிமகன்களும் தங்களது உடலை காக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். அதாவது விஸ்கி, பிராந்தி அருந்தும் குடிமகன்கள், வெயில் காலத்தில் அப்படி குடித்தால் உடல் இன்னும் பலகீனமாகிவிடும் என கள்ளு கடைகளை தேடத் துவங்கிவிடுவர்.




இதனால் கோடை காலம் தொடங்கும்போது கள்ளு கடைகளும் முளைத்துவிடும். பனை மரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை பானமான கள்ளுக்கு குடிமகன்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. அதிலும் பவுடர் கலக்காத கள்ளுக்காக குடிமகன்கள் நீண்ட தூரம் கூட பயணம் செய்வார்கள்.


இந்த ஆண்டு இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிறி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், கலவை போன்ற தாலுக்காக்களில் உள்ள பல கிராமங்களில் பனைமரத்தில் இருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் கள்ளு இறக்குவது சட்டப்படி குற்றம் என்ற நிலை உள்ளது. இதனால் கள்ளு விற்பனையை தடுக்க காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் உத்தரவில் இராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா தலைமையில் காவல்துறையினர் கள்ளு விற்பனையை தடுக்க களமிறக்கப்பட்டுள்ளனர்.


முதல் கட்டமாக கலவை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம், சோலையூர், கன்னிகாபுரம், பொன்னம்பலம், தோனி மேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் தோனிமேடு கிராமத்தில் அனுமதி பெறாமல் கள்ளு இறக்கிய கார்த்திக், மாம்பாக்கம் கிராமத்தில் பனை மரத்தில் இருந்து கள்ளு இறக்கிய வேலு என 8 பேரை போலிஸார் கைது செய்தனர். அந்த இருவரும் பனை மரத்தில் இருந்து இறக்கிய 1100 லிட்டர் கள்ளு போலிஸாரால் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.


சட்டவிரோதமாக கள்ளு இறக்கி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், இந்த தொழிலில் உள்ளவர்கள் திருந்தி வாழ நினைத்தால் அவர்களுக்கு வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து தகவல் கூறப்பட்டுள்ளது.


டாஸ்மாக் விற்பனை மந்தமாக இருக்கிறது, அதற்கு காரணம் கள்ளு விற்பனை என்பதால் டாஸ்மாக் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை நிர்வாகத்திடம் கூறி இந்த ரெய்டை நடத்த சொல்லியுள்ளார்கள் என்கிறார்கள் கள்ளு கடை உரிமையாளர்கள் தரப்பை சேர்ந்தவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT