ADVERTISEMENT

சூடானில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள் கண்ணீர் பேட்டி

06:55 PM Apr 27, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால் அப்போதிலிருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக மீண்டும் சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே தீவிரமாகப் போர் நடைபெற்று வருகிறது . இதில் சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் மற்றும் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் பொதுமக்கள் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். இதில் இந்தியர் ஒருவரும் அடங்குவார். இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்தியத் தூதரகம் உறுதி செய்தது. முன்னதாக இந்தியத் தூதரகம் சார்பில், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாகச் செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.

மேலும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "சூடானில் சிக்கியிருக்கும் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஐஎன்எஸ் சுமேதா என்ற மீட்பு கப்பல் சூடான் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்படையின் சி 130 ஜே 2 என்ற ராணுவ விமானங்கள் சவுதியில் உள்ள ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 500 இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சூடானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அனைவரும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சூடானில் வசித்து வந்த 9 தமிழர்கள் உட்பட 360 பேர் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். பின்னர் அங்கிருந்த தமிழர்கள் விமானம் மூலம் 4 பேர் சென்னையும், 5 பேர் மதுரையும் திரும்பினர். சொந்த ஊர் திரும்பியவர்களை விமான நிலையத்தில் இருந்த அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். மேலும் அவர்கள் நாடு திரும்புவதற்கு அனைத்து உதவிகளையும் செய்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

நாடு திரும்பியவர்கள் விமான நிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "சூடானில் நாங்கள் வசித்த பகுதி போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் அது முக்கிய பகுதி என்பதால் இரு தரப்பினரும் அந்த பகுதியை குறிவைத்து சண்டை போடுகிறார்கள். மக்களை தாக்கமாட்டோம் என்று போரில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் அவர்கள் வீசும் குண்டுகள் மக்கள் மீது பட்டு சேதத்தை ஏற்படுத்துகிறது. சூடானில் இருந்து சம்பாதித்து எல்லாத்தையும் விட்டு விட்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அணிந்திருக்கும் ஆடைகள் மட்டும்தான் எடுத்து வந்திருக்கிறோம். அங்கு போர் தொடங்கியதில் இருந்து உணவு, குடிநீர், மின்சாரம் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்தோம். கதவுகள் அனைத்தையும் அடைத்து வைத்து விட்டு இருளில் பயத்துடன் சத்தமில்லாமல் இருந்தோம்" என்றனர் கண்ணீருடன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT