ADVERTISEMENT

'தூண்டுதலின் பேரில் போராட்டம்; போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது' - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

05:15 PM Apr 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்புச் சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்க முடியாது' என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகளை அமைத்திருப்பதாகவும் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லூப் சாலையில் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் மீனவர்கள் தரப்பில் தங்களையும் மனுதாரர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

லூப் சாலை என்பது பொதுசாலை அல்ல. மீனவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சாலை, சாந்தோம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக லூப் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லூப் சாலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, நடைபாதைகள் அமைக்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை மீறி மாநகராட்சி சாலையை விரிவுபடுத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட சாலையில் 25 மீன் கடைகள், 15 குடிசைகள், 21 பெட்டி கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருந்தார். இந்த பணிகள் தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சாலையில் ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சாலையின் மேற்கு பக்கத்தில் உள்ள சாலையோரத்தில் கடைகள் அமைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நாளை ஒத்தி வைத்தனர். சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு மெரினா இணைப்புச் சாலையில் போக்குவரத்தை முடக்குவது ஏற்க முடியாது. தேவையற்ற முறையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT