திருச்சி மாநகரத்தில் சரித்திர பதிவேடுகள் கொண்ட ரவுடிகள், பழிவாங்கும் நோக்கத்தில் உள்ள ரவுடிகள், செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் ஆகியோரால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கடந்த ஒருமாத காலமாக திருச்சி மாநகரில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில், 100 வழக்குகளில் 103 சரித்திர பதிவேடுகள் உடைய 188 ரவுடிகள் மற்றும் குற்றப்பிரிவில் உள்ள இருபத்து மூன்று வழக்குகளில் 13 சரித்திர பதிவேடுகள் உடைய 34 ரவுடிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உடையவர்களைக் கண்டறிந்து, அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்தில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், திருச்சி மாநகரில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.