ADVERTISEMENT

சேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம்: சமூகநீதிக்கு சமாதி கட்டும் பாஜக!

12:19 AM Jul 20, 2019 | Anonymous (not verified)

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பது குறித்து, புலி வருது கதையாகச் சொல்லிக்கொண்டிருந்த நடுவண் பாஜக அரசு, இந்தமுறை உலகளாவிய ஒப்பந்தம் விடுவதற்கான பகிரங்க அறிவிப்பை வெளியிட்டு, தொழிலாளர்களின் வயிற்றில் ஓங்கி அடித்திருக்கிறது. ஜூலை 4ம் தேதி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டு மவுனத்தைக் கலைத்திருக்கிறது பாஜக அரசு.

ADVERTISEMENT


சேலத்தில் கொட்டிக்கிடக்கும் இரும்பு கனிம வளங்களைக் கொண்டு, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதுதான் சேலம் உருக்காலை. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 16.9.1970ல் சேலம் உருக்காலை தொடங்க அடிக்கல் நாட்டினார். இதற்காக 23 கிராமங்களில் இருந்து 3973 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த உருக்காலைக்காக 3000 குடும்பத்தினர் தங்கள் வீடுகளையும், விளை நிலங்களையும் துறந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, 1981ல் உற்பத்தியைத் துவக்கியது சேலம் உருக்காலை. தொடக்கத்தில் இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தித்திறன் 32 ஆயிரம் டன்னாக இருந்தது. இரண்டாம் கட்டமாக இந்த ஆலை விரிவாக்கம் (இஸட் மில்) செய்யப்பட்டபோது, இதன் உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன்னாக உயர்ந்தது. மூன்றாவது அலகு விரிவாக்கத்தின்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன ஒரு ரூபாய் நாணயம் தயாரிப்புக்கான காலி வில்லைகளை தயாரித்து, நாசிக்கிற்கு அனுப்பி வந்தது. 1995ல், நான்காம் நிலையில், வெப்ப உருட்டாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மற்றும் கார்பன் சுருள் உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 3.60 லட்சம் டன்னாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 2008ல் ஐந்தாம் நிலையில் ஸ்டீல் மெல்ட்டிங் ஷாப் தொடங்கப்பட்டது. 2010ல் இருந்து இந்த அலகும் செயல்பட்டு வருகிறது.


சேலத்தில் இருந்து 37 நாடுகளுக்கு ஸ்டீல் பொருள்களை ஏற்றுமதி செய்து, ஆண்டுக்கு சராசரியாக 2000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வந்த இந்த உருக்காலையைத் திட்டமிட்டே முடக்கி வருகிறது, இந்திய ஒன்றிய அரசு. விரிவாக்க மூலதனத்திற்காக வெளியில் இருந்து பெறப்பட்ட 2300 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளிப்பதாகவும், அதனாலேயே சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்றுவிட பரிந்துரைத்திருக்கிறது நிதி ஆயோக்.


பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் பாஜக அரசுக்கு வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே தணியாத ஆர்வம் உண்டு. இதற்காக அப்போது பங்குவிலக்கல் துறை என்ற தனி அமைச்சகமே தொடங்கப்பட்டது. அதன் பேரார்வம் இன்று வரை தணியவில்லை. தனியாருக்கு விற்பனை செய்வதற்காக மும்பையைச் சேர்ந்த எஸ்பிஐ கேபிடல் நிறுவனத்தை நியமித்திருக்கிறது நடுவண் அரசு.


அந்நிறுவனம், சேலம் உருக்காலையை ஒப்பந்தம் கோருவோர் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. சேலம் உருக்காலை மட்டுமின்றி, செயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விஸ்வேஸ்வரய்யா உருக்காலை (கர்நாடகா), அலாய் ஸ்டீல்ஸ் ஆலை (துர்காபூர்) ஆகிய ஆலைகளும் தனியாருக்கு விற்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக, எஸ்பிஐ கேபிடல் நிறுவனம், சேலம் உருக்காலையின் செயல்திறன், உள்கட்டமைப்பு, வரவு செலவு கணக்கு குறித்த ஓர் அறிக்கையை 129 பக்கங்களில் வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில், சேலம் உருக்காலையின் 2015 - 2019 வரையிலான லாப, நட்டக்கணக்கு விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. 2015ல் இந்த ஆலையின் மொத்த வருவாய் 2228 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபமாக 355.38 கோடியாகவும் இருந்துள்ளது. 2016ல் இதன் லாபம் 461.29 கோடியும், 2017ம் ஆண்டில் 234.99 கோடியும், 2018ம் ஆண்டில் 211.07 கோடியும், 2019 மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் 259 கோடி ரூபாயும் வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியிருப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது.


தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான மறுநாளே (ஜூலை 5) சேலம் உருக்காலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் 950 பேரும் காலை 6 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்கள் குடும்பத்துடனும் போராட்டம் நடத்தினர். தொழிற்சங்க தரப்பில், இது தொடர்பாக அரசுத்தரப்பில் பேசி வருகின்றனர்.


செயில் குழுமத்திலேயே இளம் உருக்காலையான சேலம் உருக்காலை உண்மையிலேயே நஷ்டத்தில்தான் இயங்குகிறதா? தனியார்மய கொள்கையின் பின்னணி குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தேவராஜூ (ஐஎன்டியுசி), பெருமாள் (தொமுச) ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.


''சேலம் உருக்காலை உள்ளிட்ட செயில் கட்டுப்பாட்டில் இயங்கும் உருக்காலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல்கள்தான் உலகத்தரமானவை. இது உலகறிந்த உண்மை. இஸ்ரோவின் மங்கள்யான், சந்திரயான் விண்கலங்களிலும், நாசாவிலும் பெருமளவு சேலம் உருக்காலையின் உருக்குப் பொருள்கள்தான் பயன்ப டுத்தப்படுகிறது. 0.3 மி.மீ. தடிமன் வரையிலும் ஸ்டீல் தகடு தயாரிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்கிறது. ரயில் பெட்டிகள் தயாரிக்கவும் சேலம் உருக்காலை இரும்புதான் பயன்படுத்தப்படுகிறது.


புராசஸிங் செலவுகள், விரிவாக்கத்திற்காக வெளியில் வாங்கப்பட்ட கடன்களாலும்தான் இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்க முக்கியக் காரணங்கள். விளக்கமாகச் சொல்வதெனில், ஆலை விரிவாக்கத்திற்காக செயில் நிர்வாகம், வெளி நிறுவனங்களிடம் இருந்து 2300 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அதற்கு, ஆண்டுக்கு வட்டி மட்டுமே 90 கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம். இதுபோக ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் தேய்மானமும் கணக்கிடப்படுகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்றைய நிலையில் 800 கோடி ரூபாய் உருக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படாமல் ஆலையிலேயே முடங்கிக் கிடக்கிறது. அந்த ஸ்டீல் பொருள்களை சந்தைக்கு அனுப்பாமல் சீனாவில் இருந்தும், ஜிண்டால் போன்ற தனியாரிடம் இருந்தும் ஸ்டீல் பொருள்களை இந்திய அரசு கொள்முதல் செய்வது ஏன்? உண்மையில், இந்திய அரசு மேற்கொள்ளும் கட்டுமான திட்டங்களுக்காக செயில் நிறுவனத்திடம் இருந்து உருக்கு பொருள்களை வாங்கினாலே இந்த ஆலைகளை மீண்டும் லாப பாதைக்குக் கொண்டு வந்துவிட முடியும்.


இந்த ஆலைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 7.50 ரூபாய்க்கு தருகின்றனர். ஆனால் எங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள 50 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட ஓர் ஆலை அமைக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டது. அத்திட்டத்தை செயல்படுத்தினால், மின்சார செலவு பாதியளவு குறைவதோடு, எங்கள் தேவை போக உபரி மின்சாரத்தை வெளிச்சந்தையிலும் விற்க முடியும். ஏனோ அத்திட்டத்தையும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். ரயில்பெட்டிகள் தயாரிக்கும் ஆலையையும் இங்கேயே தொடங்க வேண்டும். அதன்மூலம் புராசஸிங் செலவுகள் கணிசமாக குறைந்துவிடும். மேலும் சிறு தொழிற்சாலைகளையும் தொடங்க வேண் டும். அதற்கு போதுமான நிலம் சேலம் உருக்காலை வசம் இருக்கிறது. இத்திட்டங்களை செயல்படுத்தினாலே சேலம் உருக்காலையை சரிவில் இருந்து மீட்டுவிட முடியும்.


இந்த ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக நடுவண் பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தொழிலாளர்களும் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றனர்.


ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தலில் பாஜகவுக்கு வேறு ஓர் உள்நோக்கம் இருப்பதாகச் சொன்னார், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சுரேஷ் குமார்.


''தேசிய உருக்குக் கொள்கையின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு தனி நபர் ஒருவரின் ஸ்டீல் பொருள்களின் சராசரி நுகர்வு 68 கிலோவாக இருக்கிறது. இது உலகளவில் 250 கிலோவாக உள்ளது. இந்தியாவில் தனி நபர் ஸ்டீல் நுகர்வை 2030ம் ஆண்டுக்குள் 160 கிலோவாக உயர்த்தப்படும் என்று ஒருபுறம் கூறிவிட்டு, பொதுத்துறை உருக்காலைகளில் உற்பத்தியை முடக்கும் வேலைகளையும் இந்திய அரசு செய்கிறது.


இதுவரை 37 நாடுகளுக்கு சேலம் உருக்காலையில் இருந்து ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த ஆலையை ஏற்கனவே தனியாருக்கு விற்க முயன்றபோது தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக, அந்த முடிவை அப்போது நடுவண் அரசு கைவிட்டது. இப்போது தனியாருக்கு விற்க மீண்டும் துணிச்சலாக களத்தில் இறங்கியிருக்கிறது.


பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதால் தொழிலாளர்கள் எல்லோரும் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படும் அபாயம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, சமூக நீதி உரிமையை காவு வாங்கவே இப்படியொரு அஸ்திரத்தை பாஜக அரசு முன்னெடுக்கிறது. தனியார் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் சென்றுவிட்டால், சமூக நீதி இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற முடியாது.


சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக நடுவண் அரசு கைவிட வேண்டும். அத்துடன் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் நிலுவையை தள்ளுபடி செய்ததுபோல், சேலம் உருக்காலைக்காக செயில் நிர்வாகம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.


'ஒவ்வொருவரின் வாழ்விலும் செயில் இரும்பின் பயன்பாடு ஒரு துண்டாவது கலந்திருக்கும்' என்பதையே தாரக மந்திரமாக கொண்டிருக்கும் செயில் நிர்வாகம், தனியார்மயமாக்கும் திட்டத்தால் அதன் மையக்கொள்கையில் இருந்து விலகிப்போகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT