ADVERTISEMENT

கர்ப்பிணி பெண்களுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தி கொலை செய்த கொலைகார எடப்பாடி அரசு! -ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு!!

12:39 PM Mar 27, 2019 | sakthivel.m

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் வேலுச்சாமியும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு சௌந்தரபாண்டியனும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். இப்படி திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் திண்டுக்கல்லில் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாநகரில் உள்ள மணிக்கூண்டு அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், கட்சிக்காரர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் கழகத் துணை பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி தலைமை தலைமை தாங்கினார். அதோடு கூட்டணிக் கட்சியினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினோ.....

இந்திய விடுதலைக்காக எத்தனையோ மன்னர்கள், பாளையக்காரர்கள் சேர்ந்து போராடினார்கள். அவர்கள் திண்டுக்கலுக்கு வந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்தனர். இதனால் தென்னகத்தின் குருச்சேத்திரமாக திண்டுக்கல் திகழ்கிறது என்றால் பெரிய மருது, சின்னமருது, திப்புசுல்தான், வேலுநாச்சியார் போன்ற சில வீரர்களின் நினைவு தான் வருகிறது.

1966-ல் இந்த திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது வத்தலகுண்டு பகுதியில் முத்து மாநாட்டை நடத்தினார். அதுபோல் 2005ல் மண்டல மாநாட்டை ஐ. பெரியசாமி நடத்தி நடத்திக்காட்டினார். அதன்பின் இந்த தேர்தல் பொதுக்கூட்டம் மண்டல மாநாடு போல் நடத்திக் காட்டியிருக்கிறார். அந்த மண்டல மாநாட்டை நடத்திக் காட்டிய ஐ.பெரியசாமி வைரக்கல் என்று கலைஞர் பாராட்டினார் ஆனால் ஒரு வைரக்கல் மட்டுமல்ல ஓராயிரம் வைரக்கல் இருக்கிறது அந்த ஓராயிரம் வைரக்கல்லில் இருந்து தான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக வேலுச்சாமியையும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக சௌந்தரபாண்டியனையும் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம்.

இந்த இருவருமே அண்ணா, கலைஞர், அடியேன் நான் நிற்பது போல் நினைத்து நீங்கள் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி மாறி மாறி பேசுவதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜ், ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு போட்டி வைத்தால் சீனி அமைச்சர் சீனிவாசன்தான் வெற்றி பெறுவார் அதுபோல் அதிக ஊழல் செய்தது யாரென்று என்று அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இடையே போட்டி வைக்கலாம். அதில் வேலுமணி தான் வெற்றி பெறுவார்.

எடப்பாடி பழனிச்சாமியை நான் கடவுள் என்று கூறியதாக விமர்சனம் செய்து இருக்கிறார். அரசுத் துறை சார்பில் சினிமா தியேட்டர்களில் திரையிடப்பட்ட விளம்பரத்தில் பூசாரி எந்த சாமிக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்றும் விளம்பரம் வருகிறது அதைத்தான் நான் சொன்னேன் தவிர எடப்பாடியை நான் கடவுள் என்று சொல்வதற்கு நான் என்ன முட்டாளா?.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த பிஜேபி அரசு தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் 44 வது பக்கத்தில் விவசாயிகளுக்கு அடக்க விலை 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று மோடி சொன்னார். இந்த ஐந்து ஆண்டு காலங்களில் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைத்தும் 50% அந்த லாபம் கிடைக்க வில்லை. அதற்கு பிஜேபி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நெல் உள்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஆதார விலை கிடைக்கவில்லை ஆனால் விவசாயத்திற்கு சரக்கு சேவை வரி விதித்த சர்வாதிகார ஆட்சி தான் மோடியின் அரசு. உரம், விவசாய கருவிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இப்படி விவசாயத்தின் கழுத்தை நெரித்து கொண்டிருக்கும் அரசாக பிஜேபி அரசு உள்ளது.

இந்தியா விவசாய நாடு அதில் 60 சதவீதம் பேர் விவசாயிகள் உள்ளனர். அந்த விவசாயிகளின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் கடனை தள்ளுபடி செய்கிறது. தற்போது விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. இது தேர்தல் நேர நாடகம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரப் போர் ஆகும். ஊழல்வாதிகளை விரட்ட நடைபெறும் போராகும்.

விருதுநகரில் கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அது போல் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தத்தை ஏற்றியதால் 15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ளதாக செய்தி வெளியாகி இருப்பதை கண்டு கொலையே நடுங்கி விட்டது. அதை மரணம் என்று விட்டுவிட முடியாது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தி கொலை செய்திருக்கிறது இந்த கொலைகார எடப்பாடி அரசு என பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்.

அதுபோல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொள்ளாச்சி சம்பவம் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று உள்ளது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படும் உள்ளனர். அதில் சிலர் தற்கொலையும் செய்துள்ளனர் ஒரு சிலர் கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள் இதற்கு காரணம் 7 ஆண்டுகளாக போலீஸ் செயல்படவில்லையா போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பல பெண்களை காப்பாற்றியிருக்கலாம் அதை விட்டுவிட்டு திமுக மீது பழியை சுமத்தி பிரச்சனையை திசை திருப்பி தப்பிவிடலாம் என்று சில செய்திகளை பரப்புகிறார்கள்.

தைரியம் இருந்தால் முறையாக விசாரணை நடத்துங்கள் அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் 7 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடக்கிறது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நல்லவர்தான் அவருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவுமில்லை ஆனால் அவருடைய இரண்டு மகன்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் உண்மையை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் எனவே அவர் கையெழுத்திட்ட முடியாத நிலை என்று கூறி கைரேகை வைக்கப்பட்டிருந்தது அதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆளுங்கட்சிக்கு துணை நிற்பதாக கூறி வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் மட்டும் கூறவில்லை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோரும் கூறினார்கள். பன்னீர்செல்வம் கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். ஆவியோடு எல்லாம் பேசி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார். பின்னர் பிரதமர் தமிழகம் வந்து இரண்டு பேரையும் சேர்த்து வைத்து கட்ட பஞ்சாயத்து செய்தார். இந்த தேர்தல் முடிவில் விரைவாக மத்தியிலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அப்போது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் செய்வோம்.

அதில் முக்கியமாக முதல் நடவடிக்கையாக ஜெயலலிதா மர்ம மரணத்தையும் விட மாட்டோம். எதிர்க்கட்சிதான் எங்களுக்கு கொள்கை கோட்பாடு வேறுபாடு உண்டு ஆனால் ஒரு முதலமைச்சராக இருந்தவர் மர்மமாக இருந்துள்ளார். முதலமைச்சருக்கு அந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் ஜெயலலிதா மரணத்தை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் வைத்து பூட்டுவதுதான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.

ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். அதில் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை என்னவென்றால் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாசனை திரவிய தொழிற்சாலை கொண்டு வருவோம். அதுபோல் வைகை ஆற்றில் இருந்து சிமெண்ட் கால்வாய் அமைத்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்படும். 58 கால்வாய் திட்டத்தை வத்தலக்குண்டு நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும், வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை கொள்முதல் நிலையம் வத்தலகுண்டில் அமைக்கப்படும்.

அதுபோல் மழையால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஆங்கில காய்கறிகளை கொள்முதல் செய்ய வத்தலகுண்டில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். அதுபோல் திண்டுக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தப்படும். முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணைகள் கட்டுவதை திமுக கடுமையாக எதிர்க்கும் திண்டுக்கல், தேனி, பெரியகுளம், கம்பம் வழியாக புதிய ரயில் பாதை திட்டம் நிறைவேற்றி கொடுக்கப்படும்.

அதே போல் பழனி ஈரோடு சத்தியமங்கலம் இடையே ரயில் பாதை அமைக்கப்படும். வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். விவசாயிகளின் பயிர்க் கடன் .மாணவ மாணவிகளின் கல்வி கடன் ஆகியவை அடியோடு ரத்து செய்யப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் எம்எஸ் சாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியையும், எடப்பாடி பழனிச்சாமியையும் அனுப்பும் நாள் வருகிற 18-ஆம் தேதி.

எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்து பொறுப்புக்கு அனுப்பினால் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம் 40 நமதே நாடும் நமதே என்று கூறும் வகையில் மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.

எப்பொழுதுமே கலைஞர் பேசிய பின் பேசுவார் அது என்னவென்றால் நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம். அதைத்தான் நானும் கலைஞரின் மகனாகிய நானும் சொல்கிறேன் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான வேலுச்சாமியும். நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளரான சௌந்தரபாண்டியனும், வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்தனர். அதுபோல் மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவுமான சக்கரபாணி. கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மாவட்டத் துணைச் செயலாளரான நாகராஜ், தண்டபாணி நகரச் செயலாளர் ராஜப்பா, முன்னாள் நகர செயலாளர் பசீர் அகமது, முன்னாள் நகர்மன்ற தலைவர் நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பெருமாள் சாமி, அம்பை ரவி, ஜெகன்,அக்பர், முருகானந்தம் உட்பட கூட்டணிக் கட்சித் பொறுப்பாளர்களான மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் உள்பட கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT