திருச்சியில் இயங்கிவரும் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், அதன் செயல்பாடுகள் குறித்து அங்கேயே சோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் ஆண்டி மெட்டீரியல் ரைஃபிள் என்னும் ரக துப்பாக்கியை சோதிக்கும் பணி நேற்று (06.10.2021) மதியம் நடந்துகொண்டிருந்தது.
அந்தப் பணியினை மேற்கொண்டிருந்த ஊழியர் பிரகாஷ் (42), அழகேசன் (57) ஆகியோர் துப்பாக்கியைப் பரிசோதிக்கும்போது சேம்பரில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் ஊழியர்கள் பிரகாஷ் மற்றும் அழகேசன் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.