'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
"மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்பவும் இல்ல" தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம் அதிசயம் நிகழும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.
இந்நிலையில், ரஜினியின் இந்த நிலைப்பாட்டுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க எம்.பி ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், தி.மு.க மீது அ.தி.மு.கவும், முதல்வரும் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாரா? 2-ஜி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை முதல்வர் விளக்கத் தயாரா? தி.மு.க ஊழல் கட்சியா? அ.தி.மு.க ஊழல் கட்சியா? எனத் தலைமைச் செயலகத்தில் நான் விவாதிக்கத் தயார். நீங்கள் தயாரா? எனக் கேள்வியெழுப்பினார். அ.தி.மு.க தொடர்ந்த எந்த வழக்கிலும் தி.மு.கவினர் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அதன்பின் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ரஜினியின் அரசியல் வருகைக்குப் பின்னால், பா.ஜ.க இருக்கிறதா? என்பதை தற்பொழுது சொல்ல முடியாது. ஆன்மிகத்தையும், மதத்தையும் பிரிக்க முடியாது என்றார்.