Skip to main content

அடுத்தடுத்து என்ன செய்யணும்? ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக!

Published on 26/01/2020 | Edited on 27/01/2020

பாஜகவுக்கு ஆதரவான திராவிட எதிர்ப்புக் கருத்துகளை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஊதிவிட்டுவிட்டு கூலாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் ! அவர் வீசும் ஒவ்வொரு பேச்சும் ட்ரெண்டிங்காகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் ஒரு வார பத்திரிகையின் விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்த, ரஜினி வாய்ஸின் பின்னணியில் பாஜகவின் அசைண்மெண்ட் இருக்கிறது என்பதே அழுத்தமான தகவல்களாக டெல்லியிலிருந்து எதிரொலிக்கின்றன.

ஆன்மீக அரசியல் தொடங்கி, போர் வந்தால் களமிறங்குவோம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியவை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போராட்டங்களால் நாடு சுடுகாடாகி விடும், மோடியையும் அமீத்சாவையும் ராமர்-லட்சுமணனாக பார்க்கிறேன், தேசிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு என ரஜினி வீசிய ஒவ்வொரு பேச்சும் எதிர்மறை சர்ச்சைகளை உருவாக்கியது.

 

rajinikanth


அந்த வகையில் பத்திரிகை பொன்விழாவில் பேசிய ரஜினி, முரசொலியை ''வைத்திருந்தால் திமுககாரர் ; துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கொளுத்திப் போட்டதுடன், சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் ராமர்-சீதையின் புகைப்படங்களுக்கு செருப்பணிந்து நிர்வாணமாக அழைத்து சென்றார்கள். அதனை பிரசுரிக்கும் தைரியம் துக்ளக்கிற்கு மட்டும்தான் இருந்தது. பிரசுரித்த சோவுக்கு அப்போதைய கலைஞர் அரசு கடுமையான நெருக்கடியைத் தந்தது. சோவை ஆளாக்கிய இரு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம், மற்றொருவர் கலைஞர் ‘’ என்ற ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பொதுவாக தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கும் போதெல்லாம் தனது கருத்தை வாபஸ் வாங்கும் வகையில் அதனை மறுத்து பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் ரஜினி. ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக கண்டனங்களும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற குரல்களும் வலுத்த நிலையில், மன்னிப்பு கேட்க மாட்டேன் என அழுத்தமாக சொல்லி விட்டார் ரஜினி. இதனால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

 

rajinikanth

 

ரஜினியின் பேச்சுக்கு கண்டனங்களும் காவல் நிலையப் புகார்களும் அதிகரித்த  நிலையில், தனக்கு நெருக்கமான பாஜக தலைவர்கள், அரசியல் நண்பர்கள், அரசியல் விமர்சகர்கள், தேர்தல் வியூக  நிபுணர்கள்  என பலரிடமும் விவாதித்தார் ரஜினி. அவர்களோ, "எந்த சூழலிலும் உங்கள் கருத்தை வாபஸ் வாங்காதீர்கள். நீங்கள் பேசியதில் தவறேதும் இல்லை. திமுகவை பலகீனப்படுத்த பெரியார் கொள்கைகளை நீங்கள் விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும் " என எரியும் எண்ணெய்யில் நெய் வார்த்து வருகின்றனர்.

இந்த விவாதங்கள் குறித்து நாம் விசாரித்தபோது, ‘’ தமிழகத்துக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம்தான் என்பதால் ஜூன் மாதம் துவங்கவிருந்த தனது அரசியல் கட்சியை, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார் ரஜினி. அதற்குள் இரண்டு புதிய படங்களை முடித்து விடவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறார். பாஜகவின் நேரடி அரசியலுக்குள் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ரஜினி, அரசியலுக்கு வரும் பட்சத்தில், ' நான் தனித்து இயங்குவதுதான் சரியாக இருக்கும். எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வெற்றியும் உங்களுக்கானதுதான் ' என ஏற்கனவே அமீத்சாவிடம் உறுதியாகச் சொல்லி விட்டார்.

 

rajinikanth

 

அதனால் ரஜினியை பாஜகவுக்குள் கொண்டு வருவதையும் அல்லது அவருடன் கூட்டணி வைப்பதையும் விட , தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தை ஒழித்தாலே திமுக, அதிமுகவின் வாக்கு வலிமையை சிதறடிக்க முடியும். அந்த சிதறல்களை ஒரு முகப்படுத்தினாலே நாம் எதிர்பார்க்கும் தேர்தல் வெற்றியை அடைய முடியும் என அண்மைக்காலமாக திட்டமிட்டு வருகிற பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும், திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் இந்து சமூக வாக்குகளை அக்கட்சியிலிருந்து உடைக்க வேண்டும் என தீராத தாகத்தில் இருக்கிறது. திமுகவிடமிருந்து உடைக்கப்படும் இந்து சமூக வாக்குகளை ரஜினி என்கிற பிம்பத்தின் மூலம் மட்டுமே ஒரு முகப்படுத்த முடியும் எனவும் நம்புகிறது ஆர்.எஸ்.எஸ்.!

அதாவது, தமிழகத்திலுள்ள சிறுபான்மையினரான கிருஸ்துவ மற்றும் முஸ்லீம் சமுக வாக்குகளும் தலித் அல்லாத இந்துக்களான பிற சாதிகளின் வாக்குகளும்தான் திமுகவின் பலம். அனைவருக்கும் பொதுவான நபராக ரஜினியை உருவகப்படுத்தினாலும் அவரை பாஜகவின் 'ட்ரேட் மார்க்' காவே சிறுபான்மையினர் கனித்திருப்பதால் சிறுபான்மையினரின் ஆதரவு அவருக்கு கிடைக்கப்போவதில்லை.

அதனால் திமுகவுக்கு வலிமையாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை ரஜினி பக்கம் திருப்புவது அவ்வளவு எளிதானதல்ல. அதேசமயம், 'இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக' என நிலை நிறுத்துவதன் மூலம் இறை நம்பிக்கையையும் கடந்து பொதுவான அரசியலை விரும்பும் இந்துக்களை ரஜினி பக்கம் கொண்டு வர முடியும் என கணக்கிட்டுள்ளது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும்! தேர்தல் வியூக வல்லுநர்கள் சிலரும் இதே திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். ரஜினியும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் திமுகவை சீண்டுவது என்கிற கோட்பாட்டை வரையறை செய்து ரஜினிக்கு கொடுத்துள்ளது பாஜக !  முக்கியமாக, திமுக உயர்த்திப் பிடிக்கும் பெரியாரிய கொள்கைகளையும் திராவிட இயக்க செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குவதுதான் ரஜினிக்கு கொடுக்கப் பட்டுள்ள அசைண்மெண்ட் ! இந்த பின்புலத்தில்தான் பத்திரிகை விழாவில் பெரியார் பேரணியை அவர் சீண்டியது ‘’ என்று விவரிக்கிறார்கள்.

 

rajinikanth

 

திமுகவின் ஆதார சுருதியாக இருக்கும் பெரியாரை அவமதித்தால் எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வரும் என்பதை உணராதவரில்லை ரஜினி. அதனை தெரிந்தே தான் விமர்சித்தார். இந்த சர்ச்சை ஒரே நாளில் முடிந்து விடக்கூடாது என காய்களை நகர்த்திய பாஜக தலைமை, ரஜினியை தைரியப்படுத்தியிருக்கிறது. மேலும், பாஜகவின் சுப்பிரமணியசாமியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினியிடம் விவாதித்திருக்கிறார்கள்.

அது குறித்து நம்மிடம் பேசிய ரஜினியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ‘’ மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கண்டனங்கள் எழுவதால், தவறாக எதையும் பேசவில்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என உடனடியாக  விளக்கமளிக்க ரஜினி தயாரானார். அப்போ, சுப்பிரமணியசாமி, மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை உடனடியாக  சொல்ல வேண்டாம். ஒரு வாரம் கழித்துச் சொல்லுங்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார்.|

அதாவது,  கடவுள்களை செருப்பால் அடித்தார்கள் என்கிற பிரச்சனை மக்கள் மத்தியில் பதிய வேண்டுமெனில் ரஜினிக்கு எதிரான எதிர்ப்புகள் வலுவடைய வேண்டும். அதேசமயம், ஹைட்ரோ கார்பன், தேசிய குடியுரிமை உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் அமுங்க வேண்டும். அதற்காகவே ரஜினி உருவாக்கிய சர்ச்சை குறைந்த பட்சம் ஒரு வாரம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என நினைத்து ரஜினிக்கு யோசனைத் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ரஜினி, 14-ந்தேதி கிளப்பிய சர்ச்சைக்கு, மன்னிப்பு கேட்க மாட்டேன் ; நான் பேசியதில் தவறேதுமில்லை என ஒரு வாரம் கழித்து 21-ந்தேதி விளக்களித்தார் ‘’ என்கின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ரஜினிக்கு எதிராக திமுகவும் தி.க.வும் வலிமையாக களமிறங்கி ரஜினியைக் கொச்சைப்படுத்தினால், அண்ணா-கலைஞர்-திமுக பற்றி பெரியார் செய்துள்ள விமர்சனங்களையும், அண்ணாவும் கலைஞரும் பெரியாரை பற்றி விமர்சித்தவைகளையும் சேகரித்து ரஜினிக்கு கொடுத்து வருகின்றனர். மேலும், 1971-ல் சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து துக்ளக்கில் சோ பிரசுரித்த கட்டுரையை தற்போது பிரசுரிக்க ஆடிட்டர் குருமூர்த்தியும் தயாராகி வருகிறார்.

ஆக, ரஜினி என்கிற பிம்பத்தை வைத்து அடித்து ஆடத் துவங்கியிருக்கிறது பாஜக ! இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளர்ந்தெழுவதால் சூடாகவே இருக்கிறது பெரியார் மண் !

 

 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.