ADVERTISEMENT

திருமணத்தை மீறிய உறவு; மாமியாரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற மருமகன்!

06:57 AM Mar 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்தும் கேட்காததால் மாமியாரையும், அவரது ஆண் நண்பரையும் டிராக்டர் ஏற்றி மருமகன் கொலை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகேயுள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கொளஞ்சி(55). இவர்களுக்கு குழந்தை இல்லை. ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து சென்னை மார்க்கெட்டில் வேலை செய்து வந்த கொளஞ்சி 5 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

இவரது தங்கை சித்ராவை பெரம்பலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதால் அவரது மகள் சீதாவை தன்னுடன் அழைத்து வந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் அன்பழகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அன்பழகன், சீதா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அன்பழகன் கரும்பு டாக்டர் ஒட்டி வருகிறார். இந்நிலையில், அன்பழகனின் உறவினரான செல்லத்துரை என்பவருடன் கொளஞ்சி பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களின் பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த அன்பழகன் மாமியார் கொளஞ்சியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்காமல் உறவைத் தொடர்ந்துள்ளார்.

இதனால் மாமியார் கொளஞ்சி மீது அன்பழகன் கோபத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு கொளஞ்சி அவரது வீட்டுக்கு அருகில் வேப்பூர் சாலையில் தனது இருசக்கர வாகனத்துடன் செல்லத்துரையிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை அறிந்த அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்துச் சென்று முதலில் கொளஞ்சியின் மீது ஏற்றிக் கொலை செய்துள்ளார். அப்போது தப்பி ஓடிய செல்லத்துரையை பின்னால் டிராக்டரில் துரத்திச் சென்று டிராக்டர் ஏற்றிக் கொலை செய்துவிட்டு அன்பழகன் ஆவினங்குடி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மருமகன் மாமியாரையும், மற்றொருவரையும் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT