Skip to main content

கந்துவட்டி கொடுமையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Farmer drinking poison due to usur

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜ்குமார்(39). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ராஜ்குமாரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் பூச்சி மருந்து குடித்து உள்ளதாகக் கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் அன்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், ராஜ்குமார் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் மனைவி ஜெயந்தியிடம் கடந்த 2018 இல் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதேபோல், சிறுபாக்கம் அடுத்த அடரி களத்தூரைச் சேர்ந்த மணிகண்டனிடம் ரூ. 2 லட்சம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். அதில் வட்டியுடன் சேர்த்து ஜெயந்திக்கு ரூபாய் 13.50 லட்சமும், மணிகண்டனுக்கு ரூபாய் 5 லட்சமும் பணம் கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெயந்தி மற்றும் மணிகண்டன் இருவரும், பெரியநெசலூரில் ராஜ்குமாரைச் சந்தித்து, ஜெயந்திக்கு மொத்தம் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 32 லட்சமும், மணிகண்டனுக்கு ரூபாய் 8 லட்சமும் பணம் தர வேண்டுமெனவும், ஏற்கனவே கொடுத்த பணம் போக மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டதுடன், ஆபாசமாகப் பேசி, "பணத்தைக் கொடுக்காமல் உயிரோடு ஏன் இருக்கிறாய்" எனத் திட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 

 

இதையடுத்து ராஜ்குமார் மனைவி சங்கீதா வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.