.
கடந்த வாரம் நடந்த நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அந்த ஏரியாவில், குறிப்பிட்ட கட்சி மற்றும் சாதித்தலைவர் பேனர்களை மட்டுமே வைக்க வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்தது. இதனால், குமரேசன் தரப்பினர் மதனை அணுகி பேனரை எடுக்கச் சொன்னார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த மதன், அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால், ஆத்திரமான குமரேசனும், அவருடைய நண்பர்கள் செல்வமணி, சீமான், தீனா, அஜித், குமரகுரு ஆகியோரும் மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்த தாக்குதலில் மதன் பலியானார். காயங்களுடன் தப்பித்த தீபக் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலையை அரங்கேற்றிய கும்பல், அடுத்தகட்ட ஆலோசனையை, அதே பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரிடம் நடத்தினார்கள். அதன்பிறகே, தலைமறைவானார்கள். மதன் இறந்ததால் ஆவேசம் அடைந்த அவனது சகாக்கள், எதிர் தரப்பினரின் வீடுகளைச் சூறையாடினர். காவல்துறையினர் வந்து தடியடி நடத்த வேண்டியதாயிற்று.
கொலையாளிகள் என்று சொல்லப்படும் 6 பேரும் மறைந்திருந்த இடத்தைச் சுற்றிவளைத்த போலீசார், இரவோடு இரவாக அள்ளிக்கொண்டு வந்து, முடிந்தமட்டிலும் ‘கவனித்து’ ரிமான்டிற்கு அனுப்பினர். அதே நேரத்தில், விசாரணையின்போது, தாங்கள் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரரின் பெயரையும் சொல்லியிருக்கின்றனர். ‘அட, சரவணா’ என்று அப்போது காதில் வாங்கிக்கொண்ட காவல்துறையினர், ‘நம்ம ஆளாச்சே’ என்று வழக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.
மகன் சிம்புவின் ரசிகர் மன்ற தலைவர் மதன் என்பதால், அவருடைய குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் டி.ராஜேந்தர்.