முகத்தில் செயற்கை சுவாசக் கருவி மாற்றப்பட்டு இருந்ததால் அந்த பெண்ணால் சத்தமிட இயலவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதும் அங்கிருந்த மருத்துவர்களிடம் லேப் டெக்னீசியன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த மருத்துவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அப்போலோ நிர்வாகத்தில் இது தொடர்பாக அந்தப் பெண் புகார் தெரிவித்தபோதும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்தனர்.
இதனால் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்திருந்தார் அந்தப் பெண். காவல்துறையினர் விசாரணைக்கு சென்றபோது அந்தப் பெண் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சைக்கு வந்தவர் எனக்கூறி போலீசாரை திருப்பி அனுப்பியது அப்போலோ நிர்வாகம். ஆனால் அந்தப் பெண் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்வரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று போராட்டம் நடத்தினார். அதனால் தங்களுக்கு வேண்டப்பட்ட இரு போக்குவரத்து போலீசாரை கொண்டு விசாரிப்பது போல நாடகத்தை நடத்தியது அப்போலோ நிர்வாகம். இதுகுறித்து மீண்டும் காவல் ஆணையருக்கு அந்தப் பெண் ஆன்லைனில் புகார் அளித்ததால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விசாரிக்க சென்ற துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளரிடம் அந்த பெண்ணுக்கு மனநிலை சரியில்லை அதனால்தான் சிகிச்சை அளித்து வருகிறோம் என்ற அடிப்படையில் பேசி சமாளித்து உள்ளனர்.
அதனை ஏற்காத காவல் உதவி ஆய்வாளர் அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்தார். அப்போது அந்த அறிக்கையில் அந்த பெண் கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பெண்ணை நேரடியாக சந்தித்து விசாரித்தபோது லேப் டெக்னீசியன் தன்னிடம் அருவெறுக்கத்தக்க வகையில் நடந்ததாக கதறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கை காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் உடனடியாக மருத்துவமனை ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 6 நாட்கள் கடந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் டெல்லிபாபுவை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்வதில்லை என்று அந்த ஐடி பெண் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒருபுறம் நடக்க மறுபுறம் பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.