ADVERTISEMENT

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு; வெளியான விசாரணை தேதி

10:07 PM Sep 09, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட 3,000 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஜாமீன் பெற முயற்சித்து வரும் செந்தில்பாலாஜி தரப்புக்கு ஷாக் கொடுக்கும் வகையில் முதன்மை நீதிமன்றமும், எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் மாறி மாறி ஜாமீன் மனுவை தாங்கள் விசாரிக்க அதிகாரம் இல்லை என மறுத்து வந்தன. தொடர்ந்து யாருக்கு ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் உண்டு என்பதை தெரிந்து கொள்ள உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம். அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு திங்கட்கிழமை (04.09.2023) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லியிடம் முறையிட்டிருந்தார். இந்நிலையில் வரும் திங்கட்கிழமை (11/09/2023) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நடத்த இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT