"பொய்யை சொன்னாலும் பொறுந்துகிறபடி சொல்ல வேண்டும் என்பது வழக்க மொழியாக இருந்து வருகிறது. அந்த மொழியை மிகச் சரியாக கடைபிடித்து வருகிறார் அமைச்சரான அண்ணன் செங்கோட்டையனுங்க.." என வெளிப்படையாகவே பேசுகிறார்கள் ஈரோடு அ.தி.மு.க. ர.ர.க்கள். கழுவுற மீனில் நழுவுற மீனாக அரசியல் சம்பந்தமான கேள்விகளை தவிர்த்து அந்த இடத்தை விட்டு பறந்து செல்பவரான மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியது.
"தமிழகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.
மேலும் இரவு நேரத்தில் லாரிகள் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம், கர்நாடகா இரு மாநில போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுங்க கட்டண விஷயத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த சிலர் நினைத்தனர் ஆனால் அது பலிக்கவில்லை." இவ்வாறு பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் "சார் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. திரும்ப பெற்றுள்ளதே..? "ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்..." "பா.ஜ.க.விடம்..." "மத்திய அமைச்சரவையில்.." என பல கேள்விகள் தொடர்ந்து கேட்க நிருபர்கள் முயல சிரித்துக் கொண்டே கும்பிடு போட்ட அமைச்சர் செங்கோட்டையன் "முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். இணைந்து பணியாற்றி தமிழகத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்கிறார்கள்.." என அவர் சொல்லி முடிக்கும் முன்பே கூட்டத்தில் இருந்த ர.ர. ஒருவர் கல கல வென சிரிக்க செங்கோட்டையனாலும் சிரிப்பை அடக்க முடியாமல் காருக்குள் ஏறி கண்ணாடியை ஏற்றிக் கொண்டு அவர் சொன்ன பதிலை அவரே நினைத்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே போனார்.
அண்ணன் கழுவுற மீனில் நழுவுற மீனப்பா.." என ர.ர.க்கள் மீண்டும் கமெண்ட் அடித்தனர்.