புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விழாக்கள், குடும்ப விழாக்கள் என்று எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அந்த விழாவின் தொடக்கத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்குவதும், விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதும் சேந்தன்குடி மரம் தங்கசாமி வழக்கமாக கொண்டிருந்தார். அதன் பிறகு அதே முறையை இளைஞர்கள் பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் புயலில் மரங்கள் அழிந்துவிட்டதால் அழிந்த மரங்களை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.
அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பல மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் சேர்த்தனர். அப்போது புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டவுடன் புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தகத்துடன் மரக்கறுகளும் வழங்கப்பட்டது.
இது குறித்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்ற இளைஞர்கள் கூறும் போது.. இன்றைய நிலையில் மரங்களில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதானால் தான் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். அதேபோல பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மரம் வளர்ப்பு என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதால் பள்ளி திறப்பின் முதல் நாளில் அவர்களை வரவேற்று மரக்கன்றுகளை வழங்கி உள்ளோம். அதேபோல புதிய மாணவர்களுக்கும் வழங்கி இருக்கிறோம். இந்த கன்றுகளை இந்த மாணவர்கள் நிச்சயம் வளர்த்துவிடுவார்கள். பின்னாளில் இந்த மரங்களே இவர்களின் உயர்படிப்புக்கு உதவும் என்றனர்.