Skip to main content

கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை! முதல் கலந்தாய்விலேயே இடம்பிடித்த 5 பேர்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

 Keeramangalam Government School Student Achievement ... Place in Government Colleges for 5 persons in the first consultation

 

மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்து கொண்ட, கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில், தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, ஆய்வுக் குழு சொன்னாலும், அதில் தமிழக அரசு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது. இதில் மீதமுள்ள 2.5 சதவீதம் இடங்களை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் கேட்டு வந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டால் கிராமப்புற மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், 16 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இன்று (18-11-2020) முதல், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு, சென்னை நேரு அரங்கில் தொடங்கியுள்ளது. முதல் நாள் கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கீரமங்கலம் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேருக்கு வாய்ப்பு
 

Keeramangalam Government School Student Achievement... Place in Government Colleges for 5 persons in the first consultation


இந்தக் கலந்தாய்வில், கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 5 பேர் கலந்து கொண்டனர். அதில், கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் திவ்யா மற்றும் பிரசன்னா ஆகிய இரு மாணவிகளும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணிகா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதேபோல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஹரிகரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். கீரமங்கலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன், மாரிமுத்து ஆகியோர் ஃபோனில் வாழ்த்து கூறினார்கள்.

 

இதில் 3 மாணவ, மாணவிகள் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை படித்து, தேசிய திறனாய்வுத் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் என்பதால் செரியலூர் கிராம இளைஞர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Keeramangalam Government School Student Achievement... Place in Government Colleges for 5 persons in the first consultation

                                                                          மாணவன் ஹரிகரன்
 

மேலும் 8 மாணவ, மாணவிகள்

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்தாய்வில் கலந்து கொண்ட புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுகன்யா, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் அகஸ்தீஸ்வரன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியையும், சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கவிவர்மன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியையும், அரிமளம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், தாந்தாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கிருஷ்ணவேணி மற்றும் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரபாகரன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.

மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா மற்றும் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பவித்திரன் ஆகிய இருவருக்கும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், பணம் கட்டி படிக்க முடியாத சூழ்நிலையால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துள்ளனர். இந்நிலையில், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமானோர் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வாகி உள்ளதால், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வாகி உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் ஆகியோர் வாழ்த்துக் கூறினார்கள். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.

ஒரே ஊரில் இருந்து 5 மருத்துவர்களை கீரமங்கலம் அரசுப் பள்ளிகள் உருவாக்கி உள்ளது சாதனையாக உள்ளதாகக் கூறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.