ADVERTISEMENT

பள்ளி மாணவர்கள் மோதல்! ப்ளஸ் 2 மாணவன் பலி! 

03:04 PM Apr 30, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தின் முக்கூடல் அருகேயுள்ள பள்ளகால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ப்ளஸ்-2 வரை செயல்பட்டு வருகிற இந்தப் பள்ளியில் அக்கம் பக்கக் கிராமங்களின் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.


இந்தச் சூழலில் கடந்த 26ம் தேதியன்று +2 வகுப்பு மாணவன் ஒருவன் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் கையில் கயிறு கட்டிக் கொண்டு வருவதைப் பார்த்ததும், நீ ஏன் உன் கையில் கயிறு கட்டியிருக்கிறாய். நாங்க தான் கயிறு கட்டணும் என்று சொல்லி 11ம் வகுப்பு மாணவனிடம் வாக்குவாதம் செய்ய, பதிலுக்கு அந்த மாணவன் எதிர்த்துப் பேசியிருக்கிறார். இதையடுத்து +2 மாணவனுடன் சேர்ந்த அவனது தரப்பு மாணவர்கள் சிலர் 11ம் வகுப்பு மாணவனை தாக்கியிருக்கிறார்கள்.


இதைத் தொடர்ந்து தங்கள் வகுப்பு மாணவன் தாக்கப்பட்டதையறிந்த 11ம் வகுப்பின் சக மாணவர்கள் ஆதரவாகக் கிளம்பியவர்கள் தாக்கிய +2 மாணவர்களுடன் மோத, இருதரப்பு மாணவர்களுக்குள் கைகலப்பு, மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் பாப்பாக்குடியைச் சேர்ந்த ப்ளஸ்-2 மாணவன் செல்வ சூர்யாவின் காது கிழிந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த மாணவர் சிசிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதல் குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.


இதனிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவன் செல்வ சூர்யா சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இது குறித்து விசாரணை நடத்திய முக்கூடல் போலீசார் மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் பலியானதால் நெல்லை மாவட்டம். பதற்றத்திலிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT