ADVERTISEMENT

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - காய்கறி வியாபாரியை கைது செய்த காவல்துறை!

08:22 AM Dec 02, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் அருகே, பள்ளி மாணவிக்குத் திருமண ஆசைக் காட்டி, கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரியைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம், குப்பனூர் அருகே உள்ள கொட்டாளூரைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). மினி டெம்போ வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்துவருகிறார். இவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

காய்கறி வியாபாரத்திற்காக சர்க்கரை செட்டிப்பட்டி கிராமத்திற்கு அடிக்கடி சென்றுவந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவருடன் சதீஷூக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை வலையில் வீழ்த்துவதற்காக அவருக்கு மட்டும் பணம் வாங்காமல் காய்கறிகளைக் கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில் தன் பக்கம் சாய்ந்துவிட்ட அந்த மாணவியிடம், தனக்குத் திருணமாகி, மனைவி, குழந்தைகள் ஆகியோர் இருப்பது குறித்த விவரங்களை மறைத்துவிட்டார்.

சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக சதீஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதை நம்பிய சிறுமி, கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி வீட்டைவிட்டு சதீஷூடன் ஓடிச்சென்றுவிட்டார்.

மகள் மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். விசாரணையில், சதீஷ்தான் மாணவியைக் கடத்திச்சென்றார் என்பதும், சேலத்தில் தனியாக ஒரு வீடு எடுத்து அங்கு சிறுமியை அடைத்து வைத்து, பலமுறை கட்டாய பாலுறவு கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பதினெட்டு வயது நிரம்பாத சிறுமியைக் கடத்திச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சதீஷ் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைதுசெய்தனர். அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT