சர்வதேச மகளிர் தின விழா, சேலத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 8) களைகட்டியது. வார விடுமுறை நாள் என்பதால், பெண்கள் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தன்னார் அமைப்புகள் என்றில்லாமல், குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பிலும் பல இடங்களில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுபோன்ற விழாக்களை, விழிப்புணர்வு பரப்புரையாகவும் சிலர் மேற்கொண்டனர். ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பெண்கள் அமைப்பினர், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாகச் சென்றது, பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
சேலம் சமூக சேவை சங்கம் பெண்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது. கோவையில் இருந்து பெங்களூருவுக்கு உதய் ஈரடுக்கு விரைவு ரயிலை பெண்களே இயக்கியதும் பெரிதும் ஈர்த்தது. அதேபோல், சேலம் கோட்டையில் உள்ள லெக்லர் தேவாலயத்தில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட சிறப்பு வழிபாடும் நடந்தது.
அதேபோல், சேலம் மாவட்டத்தில் 70 ஆயிரம் பெண்களை உறுப்பினராக கொண்டு செயல்பட்டு வரும் களஞ்சியம் நிறுவனத்தின் சார்பிலும் பல்வேறு வட்டாரங்களிலும் மகளிர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சில கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. கிராமங்களில் அருகி வரும், அம்மனை வரவேற்கும் நாட்டுப்புறப்பாடல்களை கும்மியடித்து பாடி ஆடியது வெகுவாக ஈர்த்தது. ''ஒண்ணாம் கிரகம்மா கண்ணனூர் மாரி கல்வராயன் காளி... கிரகம் வந்து நிக்குதம்மா கண் திறந்து பாரு கண் திறந்து பாரு...'' என்று தொடங்கி, ''பத்தாம் கிரகம்மா கண்ணனூர் மாரி கல்வராயன் காளி...'' வரை ஒருவர் பாட, அதை மற்ற பெண்கள் பின்தொடர்ந்து வட்டமாக சுற்றிவந்து கும்மியடித்து பாடினர்.
முன்னதாக, மணியக்காரம்பாளையம் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி பேசுகையில், ''பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அவர்களை கவனமுடன் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்று தெளிவாக சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தையின் அப்பா, அண்ணன், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என எந்த ஆண் தொட்டாலும் அதன் உள்நோக்கம் பெண் குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால், எல்லோருடைய தொடுதலும் ஒன்றுபோல இருக்காது. ஆகையால் பெண் குழந்தைகள் யாரிடம் பேசுவதாக இருந்தாலும் யாரும் அவர்களை தொடாமல் பேச வேண்டும் என்பதையும் சொல்லித்தர வேண்டும். நாமும் அவர்களிடம் அப்படி தள்ளி நின்றுதான் பேச வேண்டும்,'' என்றார்.