ADVERTISEMENT

சேலத்தில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் குண்டாசில் கைது!

07:48 AM Nov 21, 2019 | santhoshb@nakk…

சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வழிப்பறி திருடர்கள் இருவர், இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT


சேலம் தாதுபாய்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்துராஜ். கடந்த அக். 17ம் தேதி அப்பகுதியில் டிடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மர்ம நபர்கள் இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலி, தீபாவளி பண்டிகைக்கு துணிமணிகள் வாங்குவதற்காக வைத்திருந்த 10200 ரூபாய் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அப்போது சிலர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டினர்.

ADVERTISEMENT


இதுகுறித்து சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் அரிசிபாளையம் அவ்வையார் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் வெள்ளையன் ரமேஷ் என்கிற ரமேஷ் (30), கிச்சிப்பாளையம் அண்ணா தெருவைச் சேர்ந்த அய்யாவு மகன் கிருபாகரன் (33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இவர்களில் வெள்ளையன் ரமேஷ் மீது அம்மாபேட்டை காவல் சரகத்தில் நடந்த ஒரு கொலை வழக்கும், கிருபாகரன் மீது மல்லசமுத்திரம் காவல் சரகத்தில் நடந்த கொள்ளை முயற்சி வழக்கும், கிச்சிப்பாளையம் காவல் சரகத்தில் நடந்த வழிப்பறி வழக்கும் ஏற்கனவே உள்ளது.


தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததோடு, சமூக அமைதிக்கும் குந்தகம் விளைவித்தும் வந்ததால் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் சேலம் மாநகர காவல்துறையினர் புதன்கிழமை (நவ. 20) நேரில் சார்வு செய்தனர். இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT