ADVERTISEMENT

சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் தந்தையை கொடூரமாக கொன்ற மகன்! 

07:38 AM Jan 20, 2020 | santhoshb@nakk…

சேலம் அருகே, சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் குடிபோதையில் பெற்ற தந்தையையே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


சேலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற பழனிசாமி (60). விவசாயி. இவருடைய மனைவி வேம்பா. கடந்த பத்து ஆண்டுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவருக்கு பூபதி (25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ADVERTISEMENT


பழனிசாமிக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பூபதி காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை மீறி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூபதி, தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். அப்போது முதல் பூபதிக்கும் அவருடைய தந்தை பழனிசாமிக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.


இந்நிலையில், கூலித்தொழிலாளியான பூபதி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததோடு, மது போதையில் அடிக்கடி தன் தந்தையிடம் சொத்துகளைப் பிரித்து தருமாறு தகராறு செய்து வந்துள்ளார்.


அதேபோல், சனிக்கிழமை (ஜன. 18) இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த பூபதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனிசாமியை குத்தியுள்ளார். அப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பழனிசாமியை, அதே கத்தியால் கழுத்தையும் அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே பழனிசாமி துடிதுடித்து இறந்தார்.


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அக்கப்பக்கத்தினர் பழனிசாமி கொலை செய்யப்பட்டு இருப்பது குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, பூபதியை கைது செய்தனர்.


சொத்துக்காக குடிபோதையில் பெற்ற தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT