ADVERTISEMENT

சேலத்தில் வாகன தணிக்கை; 15 லட்சம் ரூபாய் பறிமுதல்!

08:08 AM Apr 05, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், கடந்த இரு நாட்களில் நடந்த வாகனத் தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 15.37 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆதாரங்களின்றி கொண்டு செல்லப்படும் தொகை, பரிசுப்பொருட்கள் யாவும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 2) அன்று சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில், நெத்திமேட்டைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்களின்றி 7 லட்சத்து 98,546 ரூபாய் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே பகுதியில், ராணிப்பேட்டை பைபாஸ் சாலையைச் சேர்ந்த அப்துல்லா சல்மான் என்பவரின் காரில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2.85 லட்சம் ரூபாயும், உடையாப்பட்டியில் நடந்த வாகனத் தணிக்கையில், முகமது ரவுதீன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தொகை உட்பட மேலும் சில இடங்களில் நடந்த வாகனச் சோதனையிலும் உரிய ஆவணங்களில்லாமல் கொண்டு செல்லப்பட்ட தொகையை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில், மொத்தம் 15 லட்சத்து 37 ஆயிரத்து 326 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT