கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 25- ஆம் தேதி தொடங்கிய 144 தடை உத்தரவு, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தடை உத்தரவை மீறுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், காவல்துறையினர் ஹெல்மெட், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தல் போன்ற வழக்கமான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தடை உத்தரவு அமலுக்கு வந்தது முதல் கடந்த ஐந்து நாள்களில், சேலம் மாநகரில் 144 தடை உத்தரவை மீறியது, ஓட்டுநர் உரிமம், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 9538 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 இருசக்கர வாகனங்களும், 15 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.