ADVERTISEMENT

தங்கையைக் காதலித்ததால் ஆத்திரம்; வாலிபரை அடித்தே கொன்ற அண்ணன்!

07:47 AM May 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


ஆத்தூரில், தங்கையை ஒருதலையாகக் காதலித்து வந்த இளைஞரை, அண்ணன் சரமாரியாக எட்டி உதைத்ததில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படித்தை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார். இவர், சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார்.

ADVERTISEMENT


எதிரில் மோட்டார் சைக்கிளில் சிமெண்ட் மூட்டை ஒன்றை ஏற்றிக்கொண்டு வந்த இளைஞர் ஒருவர், திடீரென்று அருண்குமாரை வழிமறித்து கையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த அருண்குமார், கீழே சரிந்து விழுந்தார். ஆனாலும் அவரை விடாமல் நெஞ்சு, வயிற்றுப்பகுதியில் அந்த இளைஞர் சரமாரியாக உதைத்துள்ளார். தாக்கிய இளைஞருடன் வண்டியில் வந்த மற்றொரு நபரும், சம்பவ இடத்தில் இருந்த சிலரும் அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்கப்பட்ட அருண்குமார் வீட்டிற்குச் சென்று எதுவுமே நடக்காததுபோல் படுத்துத் தூங்கியுள்ளார். உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாததால் அவர் மீது பெற்றோருக்கும் சந்தேகம் எழவில்லை. இதைப்பற்றி பெற்றோரிடம் சொன்னால் விவகாரம் வேறு மாதிரி ஆகிவிடும் எனக்கருதி அருணும் சொல்லாமல் விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மாலையில் அவர், திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதாகத் தந்தையிடம் கூறவும், அவர் அருண்குமாரை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தபிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சனிக்கிழமை இரவு 09.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 06.45 மணியளவில் சிகிச்சை பலனியின்றி அருண்குமார் உயிரிழந்தார்.


இதுகுறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் உமாசங்கர், எஸ்ஐ நிர்மலா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அருண்குமாரின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணையில், அருண்குமாரை தாக்கியவர் ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்பது தெரிய வந்தது. சதீஸின் சித்தப்பா தங்கதுரை. கொலையுண்ட அருண்குமார், சதீஸின் தங்கை முறையான தங்கதுரை மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

தங்கை மீதான ஒருதலைக்காதலை உடனடியாக கைவிடுமாறும், இது ஊருக்குத் தெரிந்தால் எல்லோருக்கும் மானம் போய்விடும் என்றும் சம்பவத்தன்று சதீஸ் எச்சரித்துள்ளார். அதற்கு அருண்குமார் மறுத்ததால்தான் ஆத்திரத்தில் அருண்குமார் அவரை கையால் தாக்கியும், காலால் சரமாரியாக எட்டி உதைத்து தாக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. மருத்துவர்கள் பரிசோதனையில் சதீஸ்குமார் தாக்கியதில், அருண்குமாரின் மண்ணீரல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால்தான் அவர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.


இச்சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலைக்குக் காரணமான சதீஸ் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT