Skip to main content

இளைஞர் கொலை- முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 6 பேர் கைது! 

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

youth incident cuddalore police investigation

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் அபிசுந்தர் (வயது 17). இவர் கடந்த மார்ச் 9- ஆம் தேதி அன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரை தேடியதில் பகல் 11:00 மணியளவில் அப்பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் அபிசுந்தர் உடல் சடலமாக மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். 

 

அதேசமயம், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது அப்பா பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதனிடையே, இறந்த அபிசுந்தரின் உறவினர்கள் மற்றும் பூலாம்பாடி கிராம மக்கள் அபிசுந்தரைக் கொலை செய்ததாகக் கூறியும், கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், நேற்று முன்தினம் (10/03/2022) வேப்பூர் பேருந்து நிலையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் சாலை மறியல் நடைபெற்றதால், காவல்துறையினர் கிராம மக்களை வலுக்கட்டாயமாக சாலையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

 

அதனை தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார், விருத்தாசலம் ஆர்.டி.ஓ. ராம்குமார் ஆகியோர் கிராம மக்களை சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக, வேப்பூரில் முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்ட ஏ.எஸ்.பி அசோக்குமார், மார்ச் 10- ஆம் தேதி 5 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர், அப்போது கொலை நடந்ததை 17 வயது சிறுவன் ராமர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மார்ச் 11- ஆம் தேதி காவல்துறையினர் சந்தேக வழக்காக பதிவு செய்ததை, கொலை வழக்காக மாற்றி வழக்குபதிவு செய்தனர்.

 

அதன்படி, பூலாம்பாடி கிராமத்தில் அபிசுந்தர் குடும்பத்தாருடன் முன் விரோதம் கொண்ட பெரியசாமி மகன் இளையராஜா, பூலாம்பாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாதுரை ஆகியோரின் தூண்டுதல் பேரில் இளையராஜாவின் சின்ன அக்கா கணவர்  நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் பாண்டியன் (வயது 33), சின்ன அக்கா மணிமேகலை பாண்டியன் (வயது 31), பெரிய அக்காவான நிதிநத்தம் முருகராஜ் மனைவி பெரியம்மாள் (வயது 36), பெரிய அக்கா மகன் ராமர் (வயது 17) ஆகிய நான்கு பேரும் அபிசுந்தரைக்  கழுத்தை நெறித்து, மூக்கு, தாடை பகுதியில் குத்தியதில் சுய நினைவு இழந்த அபிசுந்தரை கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்ததாகக் கூறியதையடுத்து, அவர்கள் நான்கு போரையும், அவர்களுக்கு தூண்டுதலாக இருந்த இளையராஜா, அண்ணாதுரை இருவர் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.