ADVERTISEMENT

சேலம்: ஒரே நாளில் 30 ரவுடிகள் கைது!

11:17 AM Feb 01, 2019 | elayaraja

சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் நோக்கில் சேலம் மாநகர காவல்துறையினர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குற்றப் பின்னணி உடைய நபர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரவுடிகளை மடக்கி கைது செய்வதற்காக 13 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கைது நடவடிக்கை மட்டுமின்றி, மாநகர துணை ஆணையர்கள் தங்கதுரை (சட்டம்&ஒழுங்கு), ஷியாமளாதேவி (குற்றம்&போக்குவரத்து) ஆகியோர், திருந்தி வாழும் பழைய குற்றவாளிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து உரிய அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் (31.1.2019) மட்டும் குற்றப்பின்னணி உடைய, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மந்தைசாமி மகன் ஜவஹர், பரமசிவம் மகன் 'வளத்தி' குமார், சின்னத்திருப்பதியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் பிளேடு செல்வம் என்கிற பன்னீர்செல்வம், அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்கிற மாட்டுக்கார சரவணன், அஸ்தம்பட்டி கன்னாங்காட்டைச் சேர்ந்த பிரதாப், வீராணம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாட்டாமை செல்வம் என்கிற செல்வம் உள்பட 27 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதான ரவுடிகளில் பலர் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள், அடிதடி, வழிப்பறி வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''விரைவில் மக்களவை தேர்தல் வரப்போகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், குற்றங்களை அடியோடு கட்டுப்படுத்தவும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து வருகிறோம். பல வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவராக இருந்தால் அவர்களை குண்டாஸ் சட்டத்திலும் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளோம். இனி வரும் நாள்களில் இந்த நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT