ஹரி நாராயணன் வேலை செய்து வந்த குவாரி நிறுவனத்தில் சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யநாராயணன், கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இடையில் வேலையில் இருந்து விலகிவிட்ட அவர், தனியாக கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தபோது, சிறுவன் மாயமான சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவரும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த இளம்பரிதி (40) என்பவருடன் சேர்ந்து கஜேந்திரனை கடத்திச் சென்று கொலை செய்ததும், சிறுவனின் சடலத்தை அவர்கள் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் சாலையோரம் வீசிவிட்டதும் தெரிய வந்தது. சத்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளம்பரிதியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சடலத்தையும் கைப்பற்றி விசாரித்தனர்.
சிறுவனின் தந்தை ஹரி நாராயணனிடம் சத்யா கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதே குவாரி நிறுவனத்தில் இளம்பரிதி காவலாளியாக வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுவிட்டனர். எனினும், அவர்களுக்குள் நட்பு தொடர்ந்து வந்துள்ளது. வேலையை விட்டு நின்றுவிட்டதால் பணத்திற்குத் திண்டாடிய இவர்கள், சிறுவனைக் கடத்திச் சென்று அவரின் தந்தையிடம் 5 லட்சம் ரூபாய் கேட்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காகச் சிறுவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பதாக ஆசை காட்டி அவரைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவன், தனக்கு சத்யா மாமா கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார் என்று சம்பவத்தன்று உறவினர்களுக்கு அனுப்பிய எஸ்எம்எஸ்தான் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க துருப்புச் சீட்டாக அமைந்தது. ஆனால், சிறுவன் யதார்த்தமாக உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் செய்ததை அறிந்த சத்யாவும், இளம்பரிதியும் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தால் தங்கள் திட்டத்தைச் சொல்லி விடுவான் என்று கருதி, கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சிறுவனை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, எருமைப்பட்டியில் சாலையோரத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, செல்போன், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.