ADVERTISEMENT

அமைச்சர் ஊரில் ரவுடிகள் மோதல்...பிரபல ரவுடி வெட்டிக் கொலை...!

07:44 AM Jan 04, 2020 | Anonymous (not verified)

திருச்செங்கோடு அருகே சூரியன் பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி தனபால். இவர் தலைமையில் ஒரு கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்தது. இந்த தனபால் ஏற்கனவே திருச்செங்கோட்டில் அரசியல்வாதிகள் ஆதரவோடு கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து செய்துவந்த ரவுடி வளத்தி மோகன் என்பவரை சென்ற ஆண்டு பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்தார். அதேபோல் நிதி நிறுவனம் நடத்தி வந்த குப்பன் என்பவரையும் கொலை செய்ததுள்ளார். இந்த கொலை வழக்குகளில் முக்கியமான குற்றவாளியாக தனபால் சேர்க்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இந்த தனபால் கோஷ்டிக்கும் திருச்செங்கோடு பகுதியில் உள்ள சில ரவுடி கும்பலுக்கும் மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் ரவுடி தனபால் இன்று மதியம் 3 மணிக்கு திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் சாலையில் உள்ள ஆனங்கூர் ரோட்டில் கிளாக் காடு என்ற இடத்தில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று ரவுடி தனபாலை சுற்றி வளைத்தது.

இதையடுத்து தனபால் கும்பலுக்கும் அங்கு வந்த கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடி தனபால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மதியம் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருப்பவர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இவரது சொந்த ஊரிலேயே ரவுடிக் கும்பல் மோதிக்கொண்டதும், அதில் ஒரு ரவுடி கொலை செய்யப்பட்டதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT