ADVERTISEMENT

அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை; சித்த வைத்தியர் மீது சரமாரித் தாக்குதல்

11:50 AM Aug 11, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

சித்த வைத்தியர் சரவணன்

ADVERTISEMENT

இடைப்பாடி அருகே, அக்காள், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த வைத்தியரை உறவினர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் செல்வரத்தினம். இவருக்கு பிரவீணா (19), கவுசல்யா (15) என இரண்டு மகள்கள் உள்ளனர். (தந்தை மற்றும் மகள்கள் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). இவர்களில் பிரவீணாவுக்கு திருமணமாகி விட்டது. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய தங்கை கவுசல்யா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பிரவீணா, உள்ளூரைச் சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் (60) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு வரும்போதெல்லாம் சித்த வைத்தியர், பிரவீணாவிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அவருக்குத் தெரியாமல் அலைபேசியிலும் பதிவு செய்துள்ளார். மேலும், அவருடைய தங்கையிடமும் சித்த வைத்தியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆக. 8ம் தேதி, பிரவீணாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சரவணன் அவருடைய வீட்டிற்குச் சென்றார். அப்போது பெற்றோர் இல்லை. அவருக்குத் துணையாக கவுசல்யா மட்டுமே இருந்தார். வைத்தியர் சரவணன், அக்காள், தங்கை இருவரிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சிகிச்சை என்ற பெயரில் வைத்தியர் தங்களிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதால் பொறுமையிழந்த அவர்கள், இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவுக்காரர்களை அழைத்துக்கொண்டு வைத்தியர் சரவணன் வீட்டிற்குச் சென்றனர். மகள்களிடம் தவறாக நடந்தது குறித்து விசாரித்தபோது அவர், நக்கலாக பதில் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சரவணனை சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து இடைப்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நிகழ்விடம் வந்து சரவணனை மீட்டனர். பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இளம் பெண்களுக்கு சித்த வைத்தியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT