ADVERTISEMENT

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை; பவானிசாகருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

08:25 PM Aug 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.48 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 2294 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்காக 500 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.90 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.99 அடியாகவும், வறட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT