ADVERTISEMENT

பிரமாண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டி- பனங்குளம் இளைஞர்கள் வெற்றி

07:41 PM Jan 19, 2019 | bagathsingh

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு கிராமத்திலும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சுமார் 30 அடி முதல் 40 அடி உயரத்தில் வழுக்கு மரங்கள் தயாரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு புயலால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படவில்லை.

ADVERTISEMENT


இந்த நிலையில் வடகாடு பரமநகரில் நண்பர்கள் குழு சார்பில் வழுக்கு மரம் ஏறும்போட்டி நடைபெற்றது. சுமார் 55 அடி உயரமுள்ள மரம் நடப்பட்டு அதன் மீது வழுக்கும் தன்மைக்காக கிரீஸ், 10 லிட்டர் எண்ணெய் பூசப்பட்டது. மரத்தின் உச்சியில் பண முடிப்பு மற்றும் வாழைப்பழ தார், துண்டு வைக்கப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போட்டிக்கு வடகாடு, பனங்குளம், பாண்டிக்குடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அணியினர் முன்பதிவு செய்திருந்தனர் .


தொடக்கத்தில் தலா 6 பேர் கொண்ட குழுவினர் மரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டது. சில சுற்றுகளுக்கு பிறகு எண்ணிக்கையை 8 ஆகவும், இறுதியில் 10 பேர் ஏறவும் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் ஏறுவதும் சரிவதுமாகவே இருந்தனர். போட்டி தொடங்கி சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு பனங்குளம் அணியினர் ஒருவர் மீது ஒருவராக ஏறி இலக்கை தொட்டு பண முடிப்பை எடுத்தனர். இவர்களுக்கு பரிசாக ரூ. 21 ஆயிரத்தி 331 ரொக்கப் பரிசும் சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன், தமிழக மக்கள் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி எற்பாடுகளை வடகாடு பரமநகர் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT